கமல்தான்அதிகம் உழைத்தவர்.. அவரை விட்டுட்டு ரஜினியை பாடப்புத்தகத்தில் வச்சிருக்கீங்க.. சீமான் விளாசல்
நெல்லை: ஐந்தாம் வகுப்பு புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பாடம் வைத்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் குறித்து தற்போதைய ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து கடின முயற்சியால் வெற்றி பெற்றவர்களாகவும் பெரும் பணக்காரர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் உயர்ந்தவர்கள் பற்றிய 'ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ்' என்ற பாடத்தில் ரஜினி குறித்த குறிப்பு இடம்பெற்றுள்ளது.
பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகவும் ரஜினிகாந்த் திகழ்கிறாரர் என்று குறிப்பிட்டு அவரது போட்டோவுடன் பாடக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
சிமான் எதிர்ப்பு
ரஜினி குறித்த குறிப்பு பாடத்தில் இடம்பெற்றதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினி குறித்த பாடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எப்படி பாதுகானப்பதாக இருக்கும்?
சீமான் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அணுக்கழிவு மையம் அமைக்க தொழில்நுட்பம் இல்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அமைக்க திட்டமிடப்படும் அந்த மையம் எப்படி பாதுகாப்பானதாக இருக்கும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தி திணிப்பு முயற்சி
மிகப்பெரிய நாடான இந்தியாவில், பேரிடர் மேலாண்மை என்பதே இல்லை என்றும் சீமான் குற்றம் சாட்டினார். தெற்கு ரயில்வே ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியை மட்டுமே அலுவலகங்களில் பேச வேண்டும் என உத்தரவிட்டது தொடர்பாக பதிலளித்த அவர், அரசுத் துறைகளில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும்போது, இந்தியும் கட்டாயம் என்பது, இந்தியை திணிக்கும் முயற்சி என்றார்.
கமல்தான் அதிகம் உழைத்தவர்
ரஜினி குறித்த குறிப்பு 5 ஆம் வகுப்பு பாடத்தில் இடம் பெற்றிருப்பது தொடர்பான கேள்விக்கு ரஜினியை விட கமல்ஹாசன் தான் கலைத்துறையில் அதிகம் உழைத்தவர். ரஜினி குறித்து பாடம் வைத்திருப்பது வேண்டுமென்றே செய்த செயல் என சீமான் கூறினார்.
ரஜினிதான் உழைத்து முன்னேறினாரா?
நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் சுந்தர் பிச்சை போன்றவர்கள் இடம்பெற்றால்தான், அது முன்மாதிரியாக இருக்கும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.