கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற.. கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்குமா தமிழக அரசு?
நெல்லை: ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கிராமப்புற கலைஞர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ஆடி மாதம் வந்துவிட்டாலே நம்ம ஊர் அம்மன் கோவில்களில் திருவிழா தான். கூழ் ஊற்றுவது, கோவில் கொடை விழா நடத்துவது என்று வடமாவட்டங்கள் முதல் தென் மாவட்டங்கள் வரை அம்மன் கோவிலில் களைகட்டும்.
ஆனால், இந்த வருடம் அப்படியான உற்சாகத்தோடு விழாக்களை கொண்டாட முடியவில்லை. காரணம் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு தான்.
"லவ் ஜிகாத்?".. சென்னை பெண்ணை.. லண்டனில் வைத்து கட்டாய மதமாற்றம்.. சர்ச்சையில் பிரபல மத போதகர்!
கிராமங்கள்
மற்றொரு பக்கம் மத்திய அரசும் திருவிழாக்கள் நடத்த கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை காரணம்காட்டி விமரிசையாக கோவில் திருவிழாக்களைக் கொண்டாடுவதற்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் என்றால் கூட பரவாயில்லை, கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் நன்கு சமூக இடைவெளி கடைபிடிப்பதுதான் வழக்கம். மற்ற காலங்களில் கூட சமூக இடைவெளி விட்டுதான் மக்கள் விழாக்களில் பங்கேற்பார்கள். இப்போது இன்னும் விழிப்புணர்வோடு மக்கள் இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப இடவசதியும் அங்கு உள்ளது. ஆயினும், விழாக்கள் நடத்துவதற்கு கெடுபிடி தொடர்கிறது.
வேலைவாய்ப்பு
கிராம திருவிழாக்கள் என்பது அம்மன் கோவில்கள் மற்றும் பக்தர்கள் இடையேயான பிணைப்பை தாண்டி, பல்வேறு கிராமப்புற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் வழங்கக்கூடிய காலகட்டம். நையாண்டி மேளம், வில்லிசை, கணியான் கூத்து நடத்துவோர், கரகாட்டக்காரர்கள் இன்னும் பல கலை நிகழ்ச்சிகள் நடத்த கூடியவர்கள், பந்தல் அமைப்போர், மலர் கட்டும் தொழிலாளர்கள், இந்த காலத்தில்தான் ஓரளவுக்கு வருமானம் பார்க்கிறார்கள்.
கிராமிய கலைகள்
மேளம், வில்லிசை குழு இவர்களுக்கெல்லாம் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயம். அதுவும் இரண்டு நாட்கள் உழைப்புக்குப் பிறகுதான். இந்த பணத்தையும் குழுவில் உள்ள அனைவரும் பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதுபோன்ற சொற்ப வருமானத்தைக் கொண்டுதான் இந்த கிராமிய கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
வருமானம்
இந்த கலைஞர்களுக்கு வேலை கொடுப்பது ஆடி மற்றும் ஆவணி ஆகிய மாதங்கள்தான். தசரா பண்டிகையை ஒட்டி தென் மாவட்டங்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆகமொத்தம் எப்படி பார்த்தாலும் மூன்று மாதம் மட்டும்தான் இவர்களுக்கான பணி கிடைக்கும். இப்போது கிராமத்து திருவிழாக்கள் நடத்தவாவது தமிழக அரசு தாராளமாக அனுமதி கொடுத்தால் இவர்கள் வருவாய் ஆதாரம் பாதுகாக்கப்படும். வறுமையில் இருந்து மீள்வதற்கு அது கொஞ்சம் உதவிகரமாக இருக்கும்.
நல்ல முடிவு அவசியம்
ஏற்கனவே ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக அரசு நல்லதொரு முடிவை எடுத்து கிராமத்து திருவிழாக்களுக்கு அனுமதி பெற தேவையில்லை என்று அறிவிக்கலாம். அல்லது, விழாக்களை அதிக மக்கள் கூடாத அளவுக்கு சிறிய அளவில் நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கலாம். விழா என்ற பெயர்தான் சிக்கல் என்றால், சிறப்பு பூஜைகள் என்ற பெயரிலாவது அனுமதிக்கலாம். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் குறைந்த மக்கள் தொகைதான் இருக்கும். எனவே, கோவில் கொடை விழா என்றால், அதிகபட்சமாக 100 பேருக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு, பங்கேற்கலாம் என்பது போன்ற விதிமுறைகளை வகுத்தது உடனடியாக அனுமதி வழங்குவது பக்தர்களுக்கும், கிராமிய கலைஞர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.