EXCLUSIVE: என்னது.. பாம்பா.. கூப்பிடு ஷேக் உசைனை.. மிரள வைக்கும் கடையநல்லூர் "ஸ்நேக் பாபு"!
தென் மாவட்டங்களில் பாம்புகளை பிடித்து அசத்துகிறார் ஷேக் உசைன்
Recommended Video
நெல்லை: "என்னது.. பாம்பா.. கூப்பிடு ஷேக் உசைனை" என்கிறார்கள் நெல்லை மக்கள். ஷேக் உசைனை பார்த்து பாம்புகள் எல்லாம் தலைதெறித்து ஓடுகின்றனவாம்!
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர்தான் இந்த ஷேக் உசைன். குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் கொடிய விஷமுள்ள பாம்புகள் நுழைந்துவிட்டால், எல்லாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஷேக் உசைன்தானாம். வயசு 23தான் ஆகிறது. இவரை "ஒன் இந்தியா தமிழ்" சார்பில் சந்தித்து பேச வேண்டும் என்று தோன்றியது.
கேள்வி: உங்க சொந்த ஊர் எது? நீங்க என்ன பண்றீங்க? பாம்பு பிடிப்பது உங்கள் தொழிலா?
நான் குற்றாலம் பகுதியை சேர்ந்தவன். கடையநல்லூர் சின்ன வயசில் இருந்தே பாம்புகளை பிடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். எங்க மாமாதான் பாம்பு பிடிக்க சொல்லி தந்தார்.
கேள்வி: இதுவரைக்கும் எத்தனை பாம்புகளை பிடித்திருப்பீர்கள்?
நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன் இப்படி நிறைய விஷபாம்புகளை பிடித்திருக்கேன். இவை எல்லாம் மனித குடியிருப்பு பகுதியில் மனிதரோடு ஒத்து போகும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இதுவரைக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடிச்சிருக்கேன். இதில நூற்றுக் கணக்கில் ராஜநாகமும் அடக்கம்.
கேள்வி: பரந்து விரிந்த ஒரு விவசாய நிலத்தில் பாம்பு புகுந்துவிட்டால், அது எந்த இடத்தில் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
விவசாய பகுதி என்றாலே பெரும்பாலும் பம்பு செட் பக்கம்தான் ஒளிந்திருக்க வாய்ப்பு அதிகம்.
கேள்வி: ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்திருக்கிறீர்களே.,., உங்களை ஒருமுறைகூட பாம்பு கடிச்சது இல்லையா?
2 முறை கடிச்சிருக்கு. அதுகூட பொதுமக்கள் பயந்துபோய் அலறி ஓடியதால், என் கவனம் திசை திரும்பிவிட்டது. அந்த சமயத்தில் பாம்பு கடிச்சிருக்கு. அதுக்கு முறையான ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன். ஆனா, ராஜநாகமே உங்கள் முன்னாடி வந்து நின்று படையெடுத்தாலும் சரி, நீங்க அமைதியாக நின்னால் போதும். அந்த பாம்பு அமைதியாக திரும்பி போய்விடும். ஒன்னுமே செய்யாது.
கேள்வி: இதில் உங்களுக்கு வருமானம் ஏதாவது கிடைக்கிறதா?
இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட பொதுசேவைதான். இப்படி பாம்புகளை பிடிக்க வனத்துறை, தீயணைப்புத் துறையினரிடம் அனுமதியும் வாங்கி உள்ளேன். பிடிபடும் பாம்புகளை பிடித்து கொண்டு போய் காட்டில் விட்டு விடுவேன். மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சேவையை வருகிறேன். தற்போது பொதிகை இயற்கை அமைப்பு ஏற்படுத்தி வருகிறேன். வலைதளம் மூலமாகவும் இந்த சேவையை விரிவுபடுத்தி வருகிறேன்.
கேள்வி: வெறும் பாம்புகளை மட்டும் பிடிக்கிறீர்களா? அல்லது பாம்பு கடிக்கு சிகிச்சையும் செய்கிறீர்களா?
ஆமாம். சிகிச்சையும் செய்கிறேன். எத்தனையோ குக் கிராமங்களில், காட்டு பகுதிகளில், மருத்துவ வசதி இல்லாத இடங்களில் பாம்பு கடித்தவர்களை காப்பாற்றி இருக்கிறேன். இந்தியாவில் பாம்பு கடியால் மட்டுமே 50,000 இறந்து வருகின்றனர். அதிலும் 15,000 பேர் உடல் உறுப்புகளை இழந்து உள்ளனர். இதற்கு போதுமான விழிப்புணர்வு நம் மக்களிடம் இல்லாமல் இருக்கிறது. அதனால் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வுகளை நடத்தி வருகிறேன். பாம்பை பார்த்தால், எப்படி தற்காத்து கொள்வது, என்பது குறித்து இலவசமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு தந்து வருகிறேன்.
கேள்வி: போகிற இடங்களில் மக்கள் என்ன சொல்கிறார்கள்? இதுவரை உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன?
முதலில் பாம்புகள் பற்றின தவறான எண்ணங்கள் நம் நாட்டில் நிறைய உள்ளது. பாம்புகள் பழிவாங்கும், பாம்புக்கு காது கேட்கும், பாம்பு பால் குடிக்கும், பாம்பு மகுடிக்கு மயங்கும் என்று எத்தனையோ கட்டுக்கதைகளை உருவாக்கி வைத்துள்ளனர். இவை உடைக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். உண்மையிலேயே பாம்பு ரொம்ப கூச்சம் சுபாவம் உடையதுங்க" என்கிறார் ஸ்நேக் உசைன்.. ஸாரி ஷேக் உசைன்!