முதலமைச்சரை உற்சாகப்படுத்திய தென் மாவட்டப் பயணம்... எதிர்பார்த்ததை விட கூடுதல் வரவேற்பு..!
நெல்லை: கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரே திக்குமுக்காடும் வகையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி என எல்லா இடங்களிலும் அதிமுகவினர் பெருமளவில் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்ததால் முதலமைச்சர் வழக்கமாக பயணம் செய்யும் காரை தவிர்த்து திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு பயணித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இத்தகைய எழுச்சியும், வரவேற்பும் இருப்பதை பார்த்து முதலமைச்சர் தரப்பு பூரித்துள்ளது.
திமுக ஆட்சியில் ஊழல்... பட்டியலிட்டு பேசி தூத்துக்குடியில் கடுகடுத்த முதலமைச்சர்..!
அருமனை கிறிஸ்துமஸ்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை விமானத்தில் சென்று பின்னர் அங்கிருந்து காரில் பயணித்தார் முதலமைச்சர். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து அருமனை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் முதலமைச்சருக்கு அதிமுகவினர் நேற்று வரவேற்பு அளித்தனர்.
அசத்தல் வரவேற்பு
அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற்ற அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக நேற்றிரவு நெல்லைக்கு சென்றார் முதல்வர். இன்று காலை நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சென்ற முதல்வருக்கு அழகியபாண்டிபுரம், தேவர்குளம், மானூர், என வரிசைக் கட்டி நின்று உள்ளூர் அதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர்.
அடிமட்ட நிர்வாகிகள்
இதனைக் கண்டு நெகிழ்ந்துபோன முதலமைச்சர் தனது இன்னோவா காரில் இருந்து இறங்கி திறந்தவெளி பிரச்சார ஜீப்பில் நின்று கட்சியினர், பொதுமக்களை நோக்கி கையசைத்தவாறு சென்றார். தன்னிடம் சால்வை கொடுக்க வரும் அடிமட்ட நிர்வாகிகளை தடுக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவிட்டார்.
முதல்வர் தவிர்ப்பு
இதனிடையே அமைச்சர் ராஜலட்சுமி மகள் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்று வாழ்த்திய முதலமைச்சர் அந்த நிகழ்ச்சியில் மறந்தும் கூட அரசியல் பேசவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் பாடி அமைச்சர் ராஜலட்சுமியின் பெருமைகளை எடுத்துரைத்து தனது உரையை முடித்துக் கொண்டார். ஸ்டாலின் குறித்தோ, எதிர்க்கட்சிகள் குறித்தோ அந்த விழாவில் முதலமைச்சர் பேசாதது குறிப்பிடத்தக்கது.