தென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு
நெல்லை: நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
கடந்த சனிக்கிழமை, கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதால் நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக சாரலுடன் மழை பெய்ய துவங்கியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் உள்பகுதியிலும் சாரலுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது. அம்பை, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்தநிலையில், பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்து, 31 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
குற்றாலத்தில் தண்ணீர் விழாமல் பாறைகளாகவே காட்சியளித்து வந்த நிலையில், குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து சாரல் மழை பெய்தபடி இருந்தது.
ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை அறிந்த குற்றாலம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு வந்து குளித்தனர். இதே போல் பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் விழ தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி உள்ளனர். வியாபாரமும் சூடுபிடித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான அச்சன் புதூர், வடகரை, பண்பொழி, இடைகால், இலத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை தூறியபடி இருப்பதால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
இதற்கிடையே, அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் குஜராத் அருகே நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மும்பையில் விடிய விடியப் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பலத்த காற்றுடன் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தானே, விலேபார்லி, மேற்கு காந்திவ்லி, சர்ச்கேட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.