டயர்கள் தட்டுப்பாடு?. தீபாவளிக்கு பேருந்துகளை இயக்குவதில் சிக்கலா?.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்
நெல்லை: தீபாவளி பண்டிகை வருகிற 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை கோயம்பேடும் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கு மொத்தம் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பெருந்துகளுக்கான முன்பதிவு முடிந்து விட்ட நிலையில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வந்தது.
தரையில் அமர்ந்து பாடம் கேட்ட ஸ்டாலின்.. இப்படி ஒரு எளிமையான முதல்வரா?.. குவியும் பாராட்டு
டயர்களுக்குக் கடும் தட்டுப்பாடு
அதாவது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்டுவதில் சிக்கல் இருக்கலாம் என்று செய்திகள் பரவின. திட்டமிட்ட 40% பேருந்துகள் தீபாவளிக்கு இயங்காது என்றும் செய்திகள் உலா வந்தன.
அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 34,000 டயர்கள் வாங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இதுவரை வாங்கப்படாததே இந்த சிக்கலுக்குக் காரணம். உடனடியாக டயர்களை வாங்கி, பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்
இந்த நிலையில் தீபவாளிக்கு திட்டமிட்டபடி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது டயர்கள் பற்றாக்குறையால் தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்து போக்குவரத்து முடங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
சிறப்பு பேருந்துகள்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், ''தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 16 ஆயிரத்து 140 பேருந்துகள் இயக்கப்படுகிறது அதேபோன்று விடுமுறைகள் முடிந்து பொதுமக்கள் திரும்பி வருவதற்காக கூடுதலாக 17 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம் .மேலும் இது தவிர மக்களின் கூட்டத்தைப் பொருத்து கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் தயாராக உள்ளோம்.
திட்டமிட்டபடி பேருந்துகள் இயக்கப்படும்
இதில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பேருந்துகள் இயக்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர்களுக்கு தட்டுப்பாடு என்று உண்மைக்கு புறம்பான செய்திகள் வருகின்றன. நஷ்டத்தைத் தவிர்க்கும் வகையில் 42 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடும் டயர்கள் தவிர்க்கப்பட்டு தற்போது 54 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடும் டயர்கள் பேருந்துகளுக்கு பொருத்தப்படுகிறது. 15,997 புதிய டயர்கள் மே 2021 முதல் தற்போது வரை வாங்கப்பட்டுள்ளன.
1,000 டயர்கள்
மேலும் 1,000 டயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த வாரம் சென்றடையும் நிலையில் உள்ளன. இதனால் எந்தத் தடங்கலும் இல்லாமல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயங்கும். இதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. பழைய டயர்களை ரீட்ரெடிங் செய்ய டிரெட் ரப்பர், பிணைப்பு கோந்து, பிவிசி ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளன' என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.