டிடிவி தினகரன் இருக்கையில் மாணிக்கராஜா... குழம்பிய தொண்டர்கள்
நெல்லை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடைய காரில் அக்கட்சியின் தென் மண்டல செயலாளர் மாணிக்கராஜா முன் இருக்கையில் அமர்ந்திருந்தது அமமுகவினரை குழப்பமடையச் செய்துள்ளது.
குமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினகரன் சென்றிருந்தார்.
அப்போது அவருக்கு நெல்லை மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது காரின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு முன்னால் உள்ள தனது இருக்கையில் மாணிக்கராஜாவை அமர வைத்தார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- கொல்கத்தாவில் மமதா பானர்ஜி 5-வது பேரணி
தென் மண்டலம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல பொறுப்பாளராகவும் இருப்பவர் எஸ்.எஸ்.வி.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமின்தார் குடும்பத்தை சேர்ந்த இவர் தினகரனின் தென் மண்டல தளபதியாக திகழ்கிறார். அவர் அனுமதியின்றி தென் மாவட்டங்களில் கட்சி தொடர்பான எந்த முடிவையும் டிடிவி எடுக்கமாட்டார்.
மரியாதை
மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல் பாப்புலர் முத்தையா, இசக்கி சுப்பையா, தங்க.தமிழ்ச்செல்வன், என ஏராளமான தென் மாவட்ட பிரமுகர்கள் தினகரன் முகாமில் இருந்து கழன்றுகொண்டனர். இருப்பினும் மாணிக்கராஜா மீதான மரியாதையையும், அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை.
குழம்பிய தொண்டர்கள்
இதனிடையே எப்போதும் தனது டொயோட்டா லேண்ட் குரூஸர் காரில் முன் இருக்கையில் அமர்ந்தவாறு தொண்டர்களை சந்திக்கும் தினகரன், நெல்லை மாவட்டத்தில் பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களை சந்தித்து அமமுகவினரை புருவம் உயர்த்தச் செய்துள்ளது. தினகரன் அமர வேண்டிய முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருந்தார்.
அலுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட அமமுக நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, டிடிவி சார் தொடர்ந்து சாலை மார்க்கமாக பயணித்துக் கொண்டே இருப்பதால் அவருக்கு உடல் அலுப்பு ஏற்பட்டது. ஆகையால் களைப்பை போக்கும் வகையில் பின் இருக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டு சற்று கண் அயர்ந்தவாறு பயணித்தார். இதற்கும் கூட காரணம் கற்பித்தால் அதை கேட்க வேடிக்கையாக உள்ளது எனக் கூறினார்.