பரந்தூரில் விமான நிலையம்.. இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு தான்.. மத்திய இணையமைச்சர் விகே சிங்!
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு என்று மத்திய இணையமைச்சர் விகே சிங் கூறியுள்ளார்.
திருநெல்வேலி: பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசு தான் தேர்வு செய்து கொடுத்தது என்றும், அதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மத்திய இணையமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார். அதேபோல் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையை பசுமை வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் சுற்று வட்டார கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பரந்தூர் உட்பட 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் உருவாக்கப்பட உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் கட்டமைப்புக்கான பணிகளை தொடங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு- மீண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்- இது 4-வது முறை!
பரந்தூர் விமான நிலையம்
தமிழ்நாடு அரசின் அமைசர்களும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றனர். அதேபோல் பரந்தூரில் விமான நிலையம் அமையவில்லை என்றால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி எதிர்காலத்தில் பாதிப்பை சந்திக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருந்தார். அதேபோல் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
கேந்திர வித்யாலயா பள்ளிகள்
இந்த நிலையில் மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு செய்தியாளர்களை சந்தித்த விகே சிங் கூறுகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இடத்தை தேர்வு செய்து தந்தால் அதற்கான பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
பசுமை வழிச்சாலை
அதேபோல் தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் விமான நிலையத்தை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை பசுமை வழிச்சாலையாக மாற்றும் செய்து திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசுக்கு தொடர்பில்லை
சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்து கொடுத்தது. பரந்தூர் இடத்தை தேர்வு செய்ததற்கும், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. மக்களின் போராட்டம் குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ள வேண்டும். நாகர்கோவில் - திருவனந்தபுரம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட பின்னர் பணிகள் மீண்டும் தொடரும் என தெரிவித்தார்.