இந்தியை எழுத இத்தனை இம்சையா.. டென்ஷன் ஆன தென்காசி மாணவர்கள்!
தென்காசி: நெல்லைமாவட்டம் தென்காசி அருகிலுள்ள மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்தி தேர்வின்போது மாணவர்களுக்கு போதிய இட வசதி கொடுக்கப்படாததால் அவர்கள் சிரமப்பட்டு தேர்வு எழுத நேரிட்டது.
இந்த தேர்வை திருச்சி இந்தி பிரசார சபா நடத்தியது. தென்காசி, கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 750 பேர் இந்தி தேர்வான பிராத்மிக் காலையில் எழுதினர். மதியம் 350 பேர் மத்தியமா, ராஷ்ட்ரிய பத்ம ஆகிய தேர்வுகள் எழுதினர்.
இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், 2வது தேர்வு நேரம், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி ஆகும். இந்த பள்ளியில் மொத்தம் 14 அறைகளே உள்ளநிலையில் அளவுக்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வந்ததால் ஒரு பெஞ்சில் 3 மாணவ, மாணவிகளுக்கு பதில் இடநெருக்கடி காரணமாக 5 பேர் அமர வைக்கப்பட்டனர்.
இதன்காரணமாக தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒருவரையொருவர் இடித்துக் கொண்டும், தேர்வுத் தாளை பார்த்து எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் இவற்றின் தொடர்ச்சி தேர்வுகள் அடுத்த வாரம் நடைபெற உள்ளதால், தேர்வை அந்தந்த பகுதிகளிலேயே நடத்திட திருச்சி இந்தி பிரசார சபா நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்தவாரம் பிரவேசிகா, விசாரத் இரு பிரிவுகளும், பிரவீனில் இரு பிரிவுகளிலும் மொத்தம் 5 பிரிவுகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
நெல்லை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்காக பெற்றோர்கள் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.