போலீஸ் வேலையைவிட கூலி வேலைக்கு போறதே மேல்.. எஸ்ஐ விரக்தியில் அதிரடி முடிவு
திருநெல்வேலி: போலீஸ் வேலையைவிட கூலி வேலைக்கு போறதே மேல் என்ற அளவுக்கு விரக்தி அடைந்த உதவி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் 2011 -ம் ஆண்டு முதல் காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவர் அடிக்கடி இடமாற்றத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுவரையில் 8 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சென்னை ஆயுதப்படையிலிருந்து தூத்துக்குடி தருவைகுளம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் ஜனவரி மாத சம்பளம் இன்னும் வழங்கப்படாததால், விரக்தியடைந்த உதவி ஆய்வாளர் ராஜ்குமார், 15 நாள் விடுப்பில் சென்று உள்ளார். உயர் அதிகாரி தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால், கூலி வேலைக்கு போக முடிவு செய்துள்ளதாக வேதனையில் புலம்பி வருகிறாராம்.
நல்லது கெட்டது
விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ராஜ்குமார் தனது மனக்குமுறல்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவை அப்படியே பார்ப்போம். "தலையிலும் முகத்திலும் இருக்கும் முடியை கூட நம் இஷ்டப்படி வைத்து கொள்ளமுடியாத பணி. சொந்த பந்தங்களின் வீட்டு நல்லது கெட்டதில் கலந்து கொள்ள இயலாத பணி. பண்டிகைகளையோ நம் குடும்ப விழாக்களையோ நமது மனைவி மக்களோடு அனுபவிக்க முடியாத பணி. காலவரையற்ற பணி, வாராந்திர ஓய்வில்லா பணி, அரசு விடுமுறைகள் எதையும் அனுபவிக்க முடியாத பணி.
மாதம் தோறும் உத்தரவு
இம்மாதம் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகளால் மாதம் தோறும் அறிக்கை அனுப்பபடும் ஒரே பணி. அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுமுறையைகூட நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி. அமைச்சுப் பணியாளர்களின் வேலையையும் நம் மீது சுமத்தி நாம் செய்ய தவறினாலோ மறுத்தாலோ நமக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளை வழங்கும் பணி. மொத்தத்தில் இவற்றையெல்லாம் வெளியே சொல்ல கூட முடியாத படி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரே பணி.
சங்கம் அமைக்க தடை
இதுபோன்ற மன அழுத்தத்தின் காரணமாக செய்யும் தவறுகளினால் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து வெறுப்பை சம்பாதிக்கும் பணி. இவற்றையெல்லாம் கேட்பதற்கு சங்கங்கள் அமைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரே பணி.நாடு சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டுகள் ஆகியும் சுதந்திரம் கிடைக்காத ஒரே பணி- சீறுடை பணியாளர் எனும் காவல் பணி.
அனைவருக்கும் நன்றி
இத்தனைக்கும் முன்வைக்கும் ஒரே சொல் "கட்டுப்பாடான துறை". ஏன் உயர் அதிகாரிகளுக்கு அந்த கட்டுப்பாடு பொருந்தாதா? இப்படிக்கு, விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்... இதுவரை ஆதரவு வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி. அதிகாரம் செலுத்த நினைத்தவர்களுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.