எம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்
Recommended Video
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தை தனியாக பிரித்து தென்காசி என்ற தனிமாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கையை ஏற்று இன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி என்பது முதல்நிலை நகராட்சியாகும். தென்காசி மாவட்டத்தின் கீழ் தென்காசி, சிவகிரி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய வட்டங்கள் உள்ளடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த புதிய மாவட்டத்தை செயல்படுத்த தனியாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்க உள்ளது தமிழக அரசு.
தமிழகத்தின் தென்பகுதியில் 6 ஆயிரதது 823 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நெல்லை மாவட்டம் பரந்தவிரிந்து காணப்படுகிறது. இங்கு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 லட்சத்து 72 ஆயிரத்து 880 பேர் இருந்தார்கள். இந்த மாவட்டத்தில் இதுவரை தென்காசி, கடையநல்லூர், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் , நான்குனேரி உள்ளிட்ட 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
தென்காசி, செங்கல்பட்டு.. உதயமானது மேலும் 2 மாவட்டங்கள்.. முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
மாவடத்தில் 16 வட்டடங்கள்
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், செங்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, சிவகிரி,நான்குனேரி, ராதாபுரம், வீரகேரளம்புதூர், ஆலங்குளம், கடையநல்லூர், திசையன்விளை, திருவேங்கடம், மானூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட 16 வட்டங்களும் உள்ளன.
நெல்லைக்கு வர 3 மணி நேரம்
இந்நிலையில் நெல்லை மாவட்டம் இப்படி பரந்துவிரிந்து கிடப்பதால் மாவட்டத்தின் எல்லையில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.. 3மணி முதல் 4 மணி நேரம் வரை பயணிக்க வேண்டி உள்ளது. உதாரணமாக மாவட்ட எல்லையான கோட்டை வாசலில் இருந்து நெல்லைக்கு 85 கிலோமீட்டரும், சிவகிரியிலிருந்து நெல்லைக்கு 95 கிலோமீட்டரும் தொலைவாக உள்ளது. மருத்துவ மேல்சிகிச்சைக்காக நெல்லைக்கு வர வேண்டும் என்றால் மிகவும் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது.
தனி ஐஏஎஸ் அதிகாரி
இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தை தென்காசியை தலைமையிடமாக கொண்டு பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை எம்ஜிஆர் காலத்திலேயே எழுந்தது. இப்போது நிறைவேறியுள்ளது. புதிதாக உருவாகும் தென்காசி மாவட்டத்தில் இடம் பெறு தொகுதிகள் மற்றும் ஊர்களின் வரையறை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை அரசு வெளியிடவில்லை. புதிய மாவட்டத்திற்கான பணிகளை ஐஏஏஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் அதிகாரிகள் குழு மேற்கொள்ள உள்ளது. இந்த குழு இறுதி செய்து அறிவிக்கும் என தெரிகிறது.
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மாவட்டம்
நெல்லை மாவட்டம் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டம் 1790ம் ஆணடு செப்டம்பர் 1ம் தேதி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியால் உருவாக்கப்பட்டது. அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளின் இருந்தன.
இப்போது தென்காசி
இந்நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு 1986ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தினை பிரித்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போதே தென்காசியை பிரிக்கும்படி மக்கள் கோரினார்கள். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக வலுப்பெற்ற கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தினை தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.