பொங்கல் பரிசு தர ரூ. 2500 கோடி எப்படி வந்தது.. ஜெயக்குமாருக்கு தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி
குற்றாலம்: தற்போது நிதி இல்லை என தெரிவிக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்காக 2500 கோடி ரூபாய் எப்படி ஒதுக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டும் என்று அமமுக தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளார்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே அம்மா பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அதை பற்றி கவலை இல்லாமல் தமிழக அரசு இருந்து வருகிறது.
நிதி நிலைமை குறைவாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாண்புமிகு அம்மா இருந்தபோதே பொங்கல் பரிசாக 100 ரூபாய் தான் வழங்கப்பட்டது. ஆனால் இன்று ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 2500 கோடி ரூபாய் எப்படி ஒதுக்கினார்கள் ஓட்டுக்காக இந்த தொகையை வழங்கியதாக நான் கூறுகிறேன். ஆகவே அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுங்கள் என்று நான் சொல்லவில்லை. முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி அதிமுக படுதோல்வி அடையும். மாநில கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால் மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். அப்படி இருக்கும்போது திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பிஜேபி காங்கிரசுக்கு எதிராக களம் இறங்க வேண்டும். அப்படி இறங்கி 40 தொகுதிகளிலும் மாநிலக் கட்சிகள் வெற்றி பெற்றால் தான் முல்லைப் பெரியாறு காவிரி உள்ளிட்ட பிரச்சினைகள் எல்லாம் தீரும்.
மதுரைக்கு வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என வைகோ தெரிவித்துள்ளார். முதலில் அவர் தேசிய கட்சியில் கூட்டணியிலிருந்து வெளியேறி மாநில உரிமைகளுக்காக பாதுகாக்க மாநில கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என அவர் தெரிவித்தார்.