அணுக்கழிவு மையத்தால் நிலம், நீர் காற்று மாசடையாது.. கதிர்வீச்சு அபாயம் இல்லை.. நிர்வாகம் விளக்கம்
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதால், பயப்படும்படியாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கூடன்குளம் அணு உலை மையத்தில் 1,000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அணு உலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவுகள், உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும் வசதி தான் Away From Reactor எனப்படும் அணுக்கழிவு சேமிப்பு மையம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக் கழிவு மையத்தை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இதற்கான கால அவகாசம் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நாட்டிலேயே முதன் முறையாக கூடங்குளத்தில் தான், அணுக்கழிவு மையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழில் பேச தடையா... தெற்கு ரயில்வே துறைக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்!
ஆனால் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவிற்கு, பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதறகான Deep Geological Repository வசதியை ஏற்படுத்தும் வரை, அணுக் கழிவு மையத்தை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அணுக்கழிவு மையம் அமைக்கப் போவது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாது. கூடங்குளம் அணு உலையின் முதல் மற்றும் இரண்டாவது அலகுகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே, அணுக்கழிவு மையத்தில் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற அணு உலை கழிவுகளை அணுக்கழிவு சேமிப்பு மையத்திற்கு கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை என கூறப்பட்டுள்ளது. அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைகக்ப்படுவதால், கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் நிலம், நீர் காற்று மாசடையாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றியும் அதன் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் தான் அணுகழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படும் எனவே சேமித்து வைக்கப்பட உள்ள அணுக்கழிவுகளால் கதிர்வீச்சு அபாயம் ஏதும் இல்லை எனவும் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
மேலும் கூடங்குளத்தில் அமைக்கப்பட உள்ள அணுக்கழிவு சேமிப்பு மையத்தில் சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள், எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கூடங்குளத்தில் அமைக்கப்பட உள்ளது போல நாட்டின் மேலும் 2 இடங்களில், அணுக்கழிவு சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.