அப்படியே உடைந்து விழுந்த காற்றாலை... மிரண்ட பொதுமக்கள்.. பரபரப்பு வீடியோ!
நெல்லை: நெல்லை மாவட்டம் தனக்கர்குளம் பகுதியில் காற்றாலை சரிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவில் காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
நெல்லை மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காற்றாலைகள் முழு வீச்சில் சுழன்று வருகின்றன.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் தனக்கர்குளம் கிராமத்தில் காற்றின் வேகத்தால் மிகப் பெரிய காற்றாலை ஒன்று சரிந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனை அப்பகுதியிலிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
காற்றாலை சரிந்து விழுந்ததால் அப்பகுதியிலிருந்த மின்கம்பங்கள், மின் கம்பிகள் மற்றும் விளை நிலங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், முறையான பராமரிப்பு இல்லாததால் காற்றாலை சரிந்து விழுந்துள்ளதாகவும், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் காற்றாலைகள் இருப்பதால், இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.