கலர் கலரா ஆம்னி பஸ்ஸுங்க வருது.. அவ்வளவு காசு கொடுத்து எப்படிங்க போறது.. சுரண்டை மக்கள் விரக்தி
சுரண்டைக்கு அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது
Recommended Video
நெல்லை: "முன்னாடி எல்லாம் பச்சை கலர் கவர்ன்மென்ட் பஸ் அவ்வளவு வரும்.. ஆனால் இப்போ கலர் கலரா ஆம்னி பஸ்-ங்கதான் வருது.. அவ்ளோ பணம் குடுத்து டிக்கெட் வாங்கி இதுல எப்படிங்க நாங்க போறது?" என்று சுரண்டை பகுதி மக்கள் ஏக்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் வணிக நகரம்தான் சுரண்டை. இங்கு வாழும் மக்கள், படிப்பதற்காகவும், வேலை பார்ப்பதற்காகவும், சென்னை, கோவை, பெங்களூரு, கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், போன்ற பகுதிகளுக்கு தினமும் சென்று வருவார்கள்.
இவர்கள் இப்படி செல்வதற்காக எக்ஸ்பிரஸ் பஸ் அதாவது அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. மக்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக போய் வந்தனர்.
ஆம்னி பஸ்கள்
இப்படித்தான் 30 வருஷமா ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் எப்போ இந்த ஆம்னி பஸ்கள் வந்ததோ அப்பவே சிக்கல் வந்துவிட்டது. அரசு பஸ்களே குறைந்து போய்விட்டதாம். இப்போது சுரண்டையிலிருந்து சென்னைக்கு தினமும் 15-க்கும் மேலே ஆம்னி பஸ்கள் சென்று வருகின்றன.
டிக்கெட்
அரசு பஸ்கள் குறைந்துவிட்டதால், இந்த ஆம்னி பஸ்களில் ஜாஸ்தி விலை குடுத்து டிக்கெட் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு மட்டும் இல்லை.. இதேதான் சுரண்டை டூ கோயம்புத்தூருக்கும். அரசு விரைவு பஸ்ஸிற்க்கான பெர்மிட் இருந்தும் சுரண்டைக்கு பஸ் வரவே இல்லை. ஆனால் 6 ஆம்னி பஸ் கோவைக்கு போய் வருகிறது.
மக்கள் வேதனை
அது மட்டும் இல்லை.. சுரண்டை பகுதிக்கு புதிய வழித்தட பஸ்கள் இயக்குவதாக ஆய்வு செய்யும் அதிகாரிகள் அதனை கிடப்பில் போட்டுவிடுகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழக வழித்தடங்கள் எல்லாம் ஆம்னி பஸ்ஸிற்க்கு தாரை வார்க்கும் நிலை உள்ளது. ஆம்னி பஸ்காரர்களுக்கு பணம் கொட்டும் என்றாலும், சாமான்ய மக்களால் இப்படி தினமும் டிக்கெட் எடுத்து போய்வர முடியுமா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கோரிக்கை
எனவே சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களின் நிலைமையை உணர்ந்து, அரசு விரைவு பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. ஆம்னி பஸ்களுக்கே சவால் விடும் எஸ்ஈடீசி பஸ்களை இயக்கினால் ரொம்ப சவுகரியமாக இருக்கும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
முன்பதிவு மையம்
மக்கள் தொகை பெருக்கம் அதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு சுரண்டை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் இயக்கி நிறுத்தப்பட்ட விரைவு பஸ்களை உடனடியாக இயக்குவதுடன் கூடுதல் பஸ்களை இயக்கியும் பாபநாசத்திலிருந்து அம்பை, ஆலங்குளம், சுரண்டை வழியாகவும், பாபநாசத்திலிருந்து கடையம், பாவூர்சத்திரம், சுரண்டை வழியாக சென்னை மற்றும் கோவைக்கும் இயக்குவதுடன் முன்பதிவு மையத்தை ஏற்படுத்தியும் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதிகாரிகள் ஆவண செய்வார்களா?