கூட்டணி குறித்து விமர்சிப்பதா... அப்போ, எந்த கட்சியோடும் யாரும் கூட்டணி வைக்க முடியாது... வைகோ பளீச்
நெல்லை: கூட்டணி குறித்து விமர்சித்தால் இந்தியாவில் எந்த கட்சியோடும் யாரும் கூட்டணி வைக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ, அப்போது, அதிமுக - பாமக கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராமதாஸ் மேல் நல்ல மதிப்பு வைத்துள்ளேன். சமூக நீதிக்காக போராடியவர் என்றார்.
நான் பொதுவாக மற்ற கட்சிகளை விமர்சிப்பது கிடையாது என்று கூறிய வைகோ, அதிமுக - பாமக கூட்டணி குறித்து கருத்து கூற தேவையில்லை என்று கூறினார். ஒவ்வொரு கட்சியும் உடன்பாடு வைக்கும் போது தொகுதியை பிரித்துக்கொள்வர் என்றும் நான் திமுக கூட்டணியில் உள்ளேன்: அந்த கூட்டணி வெற்றி பெற பாடுபடுவேன் எனவும் கூறினார்.
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், திமுகவில் நாங்கள் இருக்கிறோம் என்பதை அந்த கட்சி விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.