அதிமுக மூலமாக தமிழகத்தில் வேரூன்ற பார்க்கிறது பாஜக.. தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு
Recommended Video
நெல்லை: இடைத்தேர்தல் நடைபெறுகின்ற விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என நெல்லையில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் .
நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி ஏர்வாடியில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தொல்.திருமாவளவன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். 2 தொகுதிகளிலும் நான் தலா ஒருநாள் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.
பாரதிய ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படவில்லை. அதிமுக வழியாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வேரூன்றப் பார்க்கிறது. இதனை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
அதிமுக , பாஜகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள் . இந்த இடைத்தேர்தல் முடிவுகள் விரைவில் நடக்க உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் . பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருந்து அதிகார துஷ்பிரயோகத்தையும் தாண்டி திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.
தமிழர்களையும் , தமிழர்களின் அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா அரசு மறைமுகமாக செய்து வருகிறது. இதற்கு அதிமுக அரசு துணை போகிறது. இந்த அரசின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் வகையில் எங்கள் தேர்தல் பிரச்சாரம் இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படத் துறையைச் சார்ந்த கலைஞர்கள் நாட்டில் நடக்கும் கும்பல் கொலை, பசு காவலர்கள் என்ற பெயரில் அராஜகம் ஆகியவை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
கடிதம் எழுதியவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கருத்துரிமையை பறிக்கும் செயலாகும் . கீழடி அகழ்வாராய்ச்சியில் முதல் மூன்று கட்ட ஆய்வுகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது 4-வது கட்ட ஆய்வு நடக்கிறது.
ஏற்கனவே முடிந்த மூன்று கட்ட ஆய்வை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். அங்கு கிடைத்த தடயங்களை மதுரையில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் தமிழ் சமுதாயம் சாதியற்ற சமூதாயம் என்பதை இந்த ஆய்வுகள் தெரியப்படுத்துவதாக தொல்லியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை மூடிமறைக்க மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு முயற்சி மேற்கொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.