அச்சுறுத்தும் காய்ச்சல்கள், நெல்லையில் பெண் பலி... அச்சத்தில் மக்கள்!
தமிழகம் முழுவதும் பலவிதமான காய்ச்சல்கள் பரவி வருவதால் நாளுக்கு நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருநெல்வேலி : தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 30 வயது பெண் இன்று உயிரிழந்துள்ளார்.
சென்னையில் 7 வயது இரட்டைக் குழந்தைகள் காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் காய்ச்சல் குறித்த பீதி அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்றாற் போல அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அரியலூர் அரசு மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு பிரிவில் 3 குழந்தைகள் உட்பட 21 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆட்சியர் விஜயலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 58 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 3 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளதால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில், 2 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடனும், 3 பேர் டெங்கு பாதிப்பாலும், 3 பேர் சிக்கன்குனியா காய்ச்சல் அறிகுறிகளுடனும் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிசிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நாளொன்றிற்கு 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மர்மகாய்ச்சல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதால் பொது சுகாதாரத்துறை கொசு ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோருக்கு உடனடியாக டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளதா எனக் கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.