மனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்
திருநெல்வேலி: மனைவி இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து குடும்பம் நடத்திய எஸ்.ஐ. இப்போது தன்னை ஏற்க மறுப்பதாக திருநங்கை ஒருவர் திருநெல்வேலி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளளார். இதனால் அந்த எஸ்.ஐ.க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே ராமச்சந்திராப் பட்டிணத்தைச் சேர்ந்தவர் திருநங்கை பபிதா ரோஸ்.
இவர் "ரோஸ்" டிரஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல சேவைகளையும் செய்து வந்தார்.
ஏமாற்றி திருமணம்
இவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் அம்பாசமுத்திரம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன், தனக்கு மனைவி இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு என்னுடன் குடும்பம் நடத்தினார்.
டிஎஸ்பி விசாரணை
இதன் மூலம் என்னிடம் பணம், நகைகளை அபகரித்துக்கொண்டார். இப்போது என்னுடன் சேர்ந்த வாழாமல் மறுக்கிறார் என புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு எஸ்பி அருண் சக்தி, தாழையூத்து டி.எஸ்.பி.பொன்னரசுக்கு உத்தரவிட்டார்.அவர் இந்த வழக்கினை தற்போது விசாரித்து வருகிறார்.
திருமணம் எப்படி?
முன்னதாக திருநங்கை பபிதா ரோஸ் தனது வீட்டில் யாரோ மர்மநபர்கள் கல்வீசி தாக்குவதாக பாவூர் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்திருக்கிறார். அப்பொழுது அங்கு எஸ்.ஐயாக இருந்தவர் விஜய சண்முகநாதன். இந்தப் புகார் சம்பந்தமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்தித்து பேசி உள்ளார். நாளடைவில், இருவருக்கும் பழக்கம் உண்டாகியதாம். பின்னர் இப்பழக்கம் இருவருக்கிடையே திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது.
கைவிட்ட எஸ்ஐ
எஸ்ஐ விஜய சண்முகநாதன், தனக்கு . மனைவி குழந்தைகள் இருப்பதை மறைத்து திருநங்கை பபிதா ரோஸை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இரண்டு வருடங்களாக நீடித்த திருமண உறவு எஸ்.ஐ.குடும்பத்தாருக்கு தெரிய வர, அவர்கள் கண்டித்தனராம். இதனால் திருநங்கை பபிதா ரோஸை சந்திப்பதை விஜய் சண்முகநாதன் முற்றிலும்புறக்கணித்தாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே திருநங்கை ரோஸ் தற்பொழுது மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு தெரிந்தவர்கள்.இந்நிலையில் திருநங்கை பபிதா ரோஸ் அளித்த புகார் காரணமாக எஸ் ஐ விஜய் சண்முகநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.