சாவு ஊர்வலம்.. வீட்டு முன்னாடி ஏன் பூவை போட்ட.. விரட்டி விரட்டி வெட்டிகொல்லப்பட்ட இளைஞர்
முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை: வீட்டுக்கு முன்னாடி பூக்களை வீசியது தொடர்பாக இளைஞர் ஒருவர் வெட்டியே கொல்லப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரைச் சேர்ந்தவர்
ராஜா. அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி முடிந்து மாணவர் ராஜா, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, முன்னீர்பள்ளம் சிவன் கோவில் அருகே வந்தபோது 5 பேர் ராஜாவை வழிமறித்தனர்.
சரமாரி வெட்டு
கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் எதிரில் வந்து நின்றவர்களை பார்த்ததும், ராஜா, பைக்கை கீழே போட்டுவிட்டு உயிரை காப்பாற்றி கொள்ள ஓட ஆரம்பித்தார். ஆனால் அந்தக் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி, கடைசியில் ராஜாவை சரமாரியாக வெட்டியது. இதில் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் ராஜா.
சாலை மறியல்
இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து, விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ராஜாவின் உடலை எடுக்கவிடாமல் போராட்டம், முற்றுகை, சாலை மறியல் என அனைத்திலும் இறங்கிவிட்டனர்.
விசாரணை
இதையடுத்து மாவட்ட எஸ்பி உடனடியாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தார். ராஜா ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த விசாரணையை போலீசார் கையில் எடுத்தனர்.
பூக்கள்
அப்போதுதான் விஷயம் வெளியே வர ஆரம்பித்தது. ராஜாவின் உறவினர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார், அப்போது, அவருக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அந்த ஊர்வலத்தில் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் கலந்துகொண்டு வழியெல்லாம் பூக்களை தெருவில் வீசியபடியே சென்றிருக்கிறார்கள்.
19 பேரிடம் விசாரணை
ராஜா வீசிய பூ அங்கிருந்த ஒரு வீட்டில் போய் விழுந்துள்ளது. இதுதான் பிரச்சனையே. வேண்டுமென்றே வீட்டில் பூ வீசியதாக தகராறு ஆரம்பித்தது. இது அப்போதே சமரசம் பேசி முடிக்கப்பட்டாலும், விரோதமாகவே வளர்ந்து கடைசியில் ராஜாவை கொல்லும் அளவுக்கு வந்துவிட்டது. இப்போது ராஜாவை கொன்றது தொடர்பாக 19 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.