உமா மகேஸ்வரியோடு கொல்லப்பட்ட பணிப் பெண்.. 3 குழந்தைகளின் தாய்.. கடைசி வரை தடுத்துப் போராடிய தீரம்!
Recommended Video
திருநெல்வேலி: திருநெல்வேலியின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரியை கும்பல் படுகொலை செய்தபோது அவர்களைத் தடுக்க முயன்று போராடியுள்ளார் 30 வயதான பணிப்பெண் மாரி. அதில் சிக்கி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் அவர், தனது கணவருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டினர்.
அப்போது வீட்டில் இருந்த பணிப் பெண் மாரி இதைப் பார்த்து அலறினார். அய்யய்யோ என்று குரல் எழுப்பியபடி கொலையாளிகளை தடுக்க ஓடி வந்தார். ஆனால் அவர்கள் இரக்கமே இல்லாமல் மாரியையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உமாவையும், அவரது கணவரையும் வெட்டாமல் தடுக்க முயன்று போராடியுள்ளார் மாரி. பரிதாபமாக அவரும் இதில் உயிரிழந்தார்.
பணிப்பெண் மாரிக்கு வயது 30. இவர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.