கொரோனா பாதிப்பு: நெல்லையப்பர் கோவில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் ரத்து - பக்தர்கள் கவலை
திருநெல்வேலி: கொரோனா வைரஸ் பரவி வருவதால் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காந்திமதி அம்மன் கோவில் ஆனித் தேரோட்டமும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கவலையையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் ஆனித்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனி மாதத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் காட்சியைக் காண வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு விழா நாளை 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 3ம் தேதி தேரோட்டம் நடைபெற வேண்டும்.
திருவிழாவிற்காக பிரம்மாண்ட தேர்களும் அலங்காரத்திற்கு தயார் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆனித் தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. ஜூன் 30ஆம் தேதிவரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது அதோடு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் திருவிழாவை நடத்துவது சரியாக இருக்காது என்று கருதி ஆனிப்பெருந்திருவிழாவை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதல் முறையாக ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா - தேனியைவிட அதிகம்- திண்டுக்கல்லில் மீண்டும் லாக்டவுன்?
500 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த தடையும் இன்றி நடைபெற்ற தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்ட பக்தர்கள் மனவருத்தமும் கவலையும் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா, வைகாசி விசாகம் வரிசையில் நெல்லை ஆனி பெருந்திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.