நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதியின் காலுக்கு செருப்பு.. குழந்தையாக பாவிக்கும் பக்தர்கள்
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு வயது முதிர்வினால் ஏற்பட்ட கால் வலிக்கு மருந்தாக செருப்பு செய்து அணிவித்துள்ளனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர் மருத்துவ குணம் வாய்ந்த ரூ. 12000 மதிப்பிலான தோல் செருப்புகளை செய்து பக்தர்கள் யானைக்கு அணிவித்துள்ளனர்.
Recommended Video
திருநெல்வேலி டவுண் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் யானையின் பெயர் காந்திமதி. 13 வயதில் கோவிலுக்குள் வந்தது. இப்போது யானைக்கு 52 வயதாகிறது. நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும் என்ற போதிலும் ஆனி தேர் திருவிழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. சுவாமி- அம்பாள் உள்ளிட்ட 5 தேர்கள் முழுவதும் மனித சக்தியால் இழுக்கப்படும் இந்தாண்டு தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன்தொடங்க உள்ள நிலையில் தினமும் சுவாமி - அம்பாள் ரதவீதியில் உலா வரும்போது யானை காந்திமதி முன் செல்வது வழக்கம்.
குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல கற்கள் குத்தாமல் இருக்க பெற்றோர்கள் செருப்பு வாங்கி கொடுத்து பாதுகாப்பாக நடக்க வைப்பதை போன்று யானையையும் குழந்தையாக பாவித்து பாசத்துடன் கோவில் நிர்வாகம் மற்றும் நெல்லையப்பர் கோவில் பக்தர்கள் பராமரித்து வருகின்றனர்.
திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவுக்கு நீச்சல்குளம்..கும்மாளம் பார்த்து பக்தர்கள் உற்சாகம்
எடை கூடிய காந்திமதி
கடந்த 2017 ம் ஆண்டு யானையை சோதனை செய்த மருத்துவ குழுவினர் வயதுக்கு ஏற்ற எடையை தாண்டி கூடுதலாக 300 கிலோ உள்ளது எனவே யானையின் எடையை குறைக்க வேண்டும் என கூறினர். 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை குறைப்பு மற்றும் யானையின் உடல் நன்மைக்காக மருத்துவர்களின் பரிந்துரை பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வாக்கிங் செல்லும் யானை
நாள்தோறும் யானையை வாக்கிங் அழைத்துச் செல்வது, அதிக இனிப்பு உள்ள கரும்பை குறைவாக கொடுப்பது, நார்ச்சத்து மிகுந்த உணவு அதிகம் கொடுப்பது எனத் தொடர் உணவு கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகளால் யானை 6 மாதத்தில் 150 கிலோ எடை குறைந்தது. தற்போது சரியான எடையை அடைந்திருந்தாலும், வயது முதிர்வின் காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளது.
யானைக்கு செருப்பு
சாலைகளில் காந்திமதி யானை செல்லும் போது மிகவும் கவனத்துடன் அழைத்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது. யானை நீண்ட நேரம் நடப்பதற்கும், நிற்பதற்கும் சிரமப்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள காந்திமதி யானை நடக்கும்போது கால் வலி ஏற்படாமல் இருக்கவும், மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ குணம் வாய்ந்த ரூ. 12000 மதிப்பிலான தோல் செருப்புகளை செய்து பக்தர்கள் யானைக்கு அணிவித்துள்ளனர். வியாபாரிகள் சங்கம் மற்றும் பக்தர்கள் சார்பில் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு புதிய செருப்புகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
கம்பீரமாக வலம் வரும் காந்திமதி
மருத்துவர்கள் ஆலோசனையின் படி யானைக்கு செருப்பு அணிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் யானைக்குதான் முதல் முதலாக செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் திருவிழா காலங்களில் காலில் வெள்ளி சலங்கை கட்டி யானை காந்திமதி ரத வீதிகளில் வலம் வரும். இந்த ஆண்டு புதிய வரவான செருப்பு அணிந்து புதிய தோற்றத்தில் யானை வலம் வர இருப்பதை காண பக்தர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.