எங்க மகளுக்கு சுகபிரசவம் ஆகாது.. சிசேரியன்தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. அப்புறம் தான்..!
திருநெல்வேலி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போகும் முன்பு திருச்செந்தூரில் முருகனை தரிசித்தோம். அங்கிருந்து குற்றாலத்துக்கு போவதற்காக திருநெல்வேலி சென்றோம். அங்கிருந்து தென்காசி வழியாக குற்றாலம் போகலாம் என்று முடிவு செய்து பயணத்தை தொடங்கினோம்.
Recommended Video
அப்போது சாலை மிக மோசமாக இருந்தது. என்னாச்சு இந்த சாலைக்கு, மிகவும் பிரபலமான சுற்றுலா தளமான குற்றாலத்திற்கு செல்ல இதுதான் பிரதான சாலையாச்சே ஏன் இப்படி இருக்கிறது என்று டிரைவரிடம் கேட்டோம். அதற்கு டிரைவர் சொன்னது தான் ஆச்சர்யமாக இருந்தது. இந்த சாலை பல ஆண்டுகளாக இப்படித்தான் படுமோசமாக இருக்கிறது என்றார்.
சரி என்னதான் செய்தார்கள் இந்த சாலையை போடுவதற்கு இதுவரை என்று தென்காசியைச் சேர்ந்த நண்பர்களிடம் விசாரித்த போது, அவர்களின் வார்த்தைகளில் ஏமாற்றமே பெரிதாக தெரிந்தது. சரி இந்த சாலையை அமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால், திருநெல்வேலி - தென்காசி இடையே திட்டமிடப்பட்ட நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி, கடந்த 7 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டிருப்பது தெரியவந்தது.
நான்கு வழிச்சாலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்திருந்த ஆர்டிஐ மனுவுக்கு பதில் அளித்த மாநில நெடுஞ்சாலைத் துறை, தற்போதுள்ள 45.6 கிமீ இருவழிப் பாதையை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ. 480.60 கோடிக்கான திட்டத்தை முடிக்க ஒப்பந்தக்காரரை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறியிருந்திருக்கிறது. இதுதான் அரசு தரப்பில் கிடைத்த பதில்.
கேரளாவை இணைக்கும் சாலை
திருநெல்வேலி-தென்காசி சாலையின் முக்கியத்துவத்தை இப்போது பார்போம்.. திருநெல்வேலி - தென்காசி சாலையானது தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் மிக முக்கிய சாலை.. தினசரி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் அத்தனை லாரிகளும் இந்த வழியாகத்தான் கேரளா செல்கின்றன. இரு மாநிலங்களுக்கு இடையிலான பொருளாதார தொடர்புக்கு இந்த சாலை மிக முக்கியமானது. குற்றாலம், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இந்த சாலைதான் மிக முக்கியமானது.
1,160 வெட்டப்பட்டது
கொடுமையான விஷயம் என்னவென்றால். இரவில் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது மிகமிக ஆபத்தானது. சாலையில் உள்ள குண்டுகுழிகள் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேரிடலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பல்வேறு பணி நிமித்தமாக திருநெல்வேலி செல்பவர்கள் தென்காசி- திருநெல்வேலி சாலையில் செல்லும் போது கடும் அவதி அடைகிறார்கள். திருநெல்வேலி - தென்காசி இருவழிச் சாலையின் ஓரத்தில் 2018-ம் ஆண்டில் புளி, வேம்பு, வாகை மற்றும் நூற்றாண்டு பழமையான ஆலமரங்கள் உட்பட 1,160 முழுமையாக வளர்ந்த மரங்கள் வெட்டப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
பூங்கோதை ஆலடி அருணா
தென்காசிக்கும் திருநெல்வேலிக்கும் இடையே உள்ள ஆலங்குளம் வரும் வரை உள்ள சாலையின் நிலைமை மிக மோசமாக இருந்தது. அந்த தொகுதியின் எம்எல்ஏவான பூங்கோதை ஆலடி அருணா இதுபற்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலையின் நிலை என்ன? என்று கேட்டு மனு அளித்திருப்பது தெரியவந்தது. அவர் தனனு மனுவில், திருநெல்வேலி-தென்காசி வரையிலான நெடுஞ்சாலை கடந்த 9 ஆண்டுகளாக பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், விபத்துகள் நேரிட்டு உயிர் பலி ஏற்படுகின்றன. இதை நான்குவழிச் சாலையாக மாற்றுவதற்கான திட்டப் பணிகள் எந்த நிலையில் உள்ளது? மக்கள் நலன் கருதி திருநெல்வேலி-தென்காசி இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுகபிரசவம் ஆகிடுச்சு
இதற்கிடையே திருநெல்வேலி-தென்காசி பகுதி மக்கள், தென்காசி சாலையை பற்றி ஒரு மீம்ஸ் போட்டுள்ளார்கள். அந்த மீம்ஸ் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அந்த மீம்ஸில், "எங்கள் மகளுக்கு சுகபிரசவம் ஆகாது.. சிசேரியன் தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. அப்புறம் தான் நெல்லை-தென்காசி சாலையை பற்றி கேள்விபட்டேன். அதுல ஒருதடவ பஸ்ல போய் வந்தோம். இப்ப சுகபிரசவம் ஆகி, தாயும் பிள்ளையும் நல்லாயிருக்காங்க.." என்பதாக முடிகிறது. மீம்ஸ் உள்ள தகவல் கேலி செய்வதாக இருக்கலாம். உண்மையில் அப்படித்தான் இருக்கிறது. வீடியோவை பாருங்கள் உங்களுக்கே தெரியும்.