ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த ஓட்டலுக்கு போறீங்களே ஏன்? ஜெயக்குமாருக்கு அப்பாவு கேள்வி
நெல்லை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஐயப்பன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவுவின் நண்பர் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப்4 மற்றும் குரூப்2 ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தேடி தேடி சிபிசிஐடி போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுவரை 40க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி மோசடியில் கைது செய்யப்பட்ட ஐயப்பன் என்பவர், திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு உடன் இருக்கும் புகைப்படத்தை அமைச்சர் ஜெயக்குமார் காட்டினார். அத்துடன் இதற்கு அப்பாவு மற்றும் திமுக என்ன பதில் சொல்லப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனி விஷ செடிகள் அழிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் எந்த முறைகேடும் நடைபெறாது என்றும் உறுதி அளித்தார்.
புகைப்படம்
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அப்பாவு செய்தியாளர்களிடம் பேசியதாவது '' ஐயப்பன் என்பவர் திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டு வருகிறேன். அப்படி வரும் போது பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடன் ஐயப்பன் என்பவர் எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு, 'தி.மு.க காலத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை நாங்கள் சரிசெய்கிறோம்' என்று அமைச்சர் கூறியிருக்கிறார். அத்துடன், என் புகைப்படத்தைக் காட்டி, ‘தி.மு.க பிரசார பீரங்கியான அப்பாவு என்ன பதில் சொல்கிறார், அவர் இப்போது தலைமறைவாக இருக்கிறார்' என அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார்.
ஹயாத் ஓட்டலுக்கு
ஆனால், நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் தான் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹயாத் ஓட்டலுக்குச் சென்றுவருகிறார். அங்கு எதற்காகச் செல்கிறார் என்பதைக் கூற முடியுமா... அவர்மீது புகார் தெரிவித்த பெண்ணுக்கு போலீஸார் மூலம் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் என்பது தெரியாதா?
உங்கள மாதிரி இல்லை
என் அரசியல் வாழ்க்கையில் தவறைத் தட்டிக் கேட்பேனே தவிர, தவறுக்குத் துணைபோனது இல்லை. அமைச்சர் ஜெயக்குமார் என்னையும் அவரைப் போல நினைக்க வேண்டாம். இந்த ஆட்சியில், அனைத்துத் தேர்வுகளுக்கும் பணம் கொடுத்துதான் வெற்றி பெறும் நிலை உள்ளது. அதிமுக அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.
விவாதிக்க தயாரா?
டிஎன்பிஎஸ்சி மோசடிகள் குறித்து விசாரிக்கும் சிபிசிஐடியின் கைகள் கட்டப்பட்டு உள்ளது.. உயர் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில், இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க சிபிசிஐடியை தமிழக அரசு அனுமதிக்குமா... தாங்கள் செய்த தவற்றை மறைக்க, பழியை திமுக மீது போடப்பார்க்குறாங்க.. அனைத்து ஊழல்களிலும் அமைச்சர்களுக்குத் தொடர்பு உள்ளது. எல்லா அமைச்சர்களின் வீடுகளிலும் பணம் எண்ணும் இயந்திரம் வச்சிருக்காங்க... அதற்குக் காரணம் என்ன? டிஎன்பிஎஸ்சி ஊழல் பற்றி என்னுடன் நேருக்கு நேராக விவாதிக்க அமைச்சர் ஜெயகுமார் தயாரா?'' இவ்வாறு கூறினார்.