சிலு சிலு சிலு காத்து.. மிதமான நீர்வரத்து.. களை கட்டும் குற்றாலம்.. குவியும் சுற்றுலா பயணிகள்
குற்றாலம்: குற்றாலம் அருவிகளில் மிதமான நீர்வரத்து காணப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
மேலும் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்துவங்கியது. பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான நீர்வரத்து உள்ளது.
கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த சூழலில் தற்போது பெய்த மழை பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.
குறைவாக விழும் தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். இதனிடையே குற்றாலம் பேரருவி அருவிக்கரை பகுதிகளில் போதுமான காவல் பாதுகாப்பு இல்லாததால் அருவி தடாகத்தில் உள்ள பாதுகாப்பு வளையத்தில் ஏறி பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.