சங்கரன்கோவிலுக்கு முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி 23-இல் கடையடைப்பு
நெல்லை: சங்கரன்கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் வருகை தரவுள்ளதையொட்டி கச்சேரி ரோடு உள்ளிட்ட பகுதியில் கடைகளை அடைக்குமாறு நகர வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக உள்ளவர் ராஜலட்சுமி. இவரது வீட்டில் பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு வரும் 23-ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விழாவுக்கு வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் மற்ற அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் வருகையையொட்டி காவல் துறையின் வேண்டுகோளை ஏற்று 2 மணி நேரத்திற்கு கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர வர்த்தக சங்கம் ஒரு நோட்டீஸை வெளியிட்டுள்ளது. அதில் நகர வர்த்தக சொந்தங்களே, தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக உள்ள ராஜலட்சுமியின் இல்ல விழாவுக்கு வருகை தரும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வருகை தருகிறார்கள்.
இதை முன்னிட்டும் பாதுகாப்பு கருதியும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் பொருட்டும் காவல் துறை வேண்டுகோளை ஏற்று டிசம்பர் 23-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை கச்சேரி ரோடு, தெற்கு ரதவீதி, புளியங்குடி ரோடு பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைப்பு செய்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.