ஒரு தடயமும் இல்லை.. அத்தனையையும் அழித்து விட்டனரா கொலையாளிகள்.. குழப்பும் உமா மகேஸ்வரி வழக்கு
உமா மகேஸ்வரி கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது
Recommended Video
நெல்லை: உமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது.
நெல்லை முன்னாள் மேயரான திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வேலைக்கார பெண் மாரி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
ஆனால் 5 நாட்களாகியும் இந்த கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. யார் கொலையாளி என்று ஒரு யூகத்துக்கே போலீசாரால் வர முடியவில்லை.
என்ன காரணம்?
உமா மகேஸ்வரிக்கு சொத்து அதிகமாக இருப்பதால் சொந்தக்காரர்தான் கொன்றிருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. மற்றொரு புறம், சீட் வாங்கி தராமல் ஏமாற்றியதற்காக கொலை செய்ய வாய்ப்பு இருக்கலாம் என்று அரசியல் ரீதியான காரணம் சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம், கொலை செய்த விதத்தை பார்த்தால், வட மாநில கொள்ளை கும்பலாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
பெண்
உமா மகேஸ்வரி வீட்டில் சிசிடிவி கேமரா இல்லை. அதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அந்த நேரம் ஒரு ஓட்டலில் ஒரு பெண் உட்பட 3 பேர் அவசர அவசரமாக சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு, கிளம்பி செல்கிறார்கள். அவர்கள் கிளம்பி சென்ற நேரமும் கொலை நடந்த நேரமும் ஒரே சமயம் என்பதால்தான், அந்த பெண் யார் என்று ஆராயப்பட்டது. கடைசியில் அவர் மதுரை திமுக பிரமுகர் சீனியம்மாள் என்று தெரியவந்து, அவரை விசாரித்து, கடைசியில் அதிலும் முன்னேற்றம் இல்லாமல் வேறு பக்கம் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.
செல்போன் ஆய்வு
மேலும், உமா மகேஸ்வரியின் செல்போன் விவரங்கள், வங்கி பரிவர்த்தனைகள், சொத்துக்கள் கை மாறிய ஆவணங்கள் போன்றவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பொதுவாக எந்த கொலை நடந்தாலும் அங்கே கொலையாளிகள் அவர்களையும் அறியாமல் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு போவார்கள். ஆனால் இந்த கொலைகளில் ஒரு தடயமும் கிடைக்கவில்லை.
தடயங்கள்
ஏற்கனவே வந்த கொலையாளிகள் ஹாலில் உட்கார்ந்து தண்ணீர் குடித்துவிட்டுதான் போயிருக்கிறார்கள் என்கிறது போலீஸ். அப்படியானால் கொலையாளிகள் குறைந்தது அரைமணி நேரமாவது அங்கேயே இருந்து எல்லா தடயங்களையும் அழித்துவிட்டு சாவகாசமாக கிளம்பி போயிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆக்ரோஷம்
அது மட்டுமில்லை.. உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் அளவுக்கு கத்தியால் குத்தி குதறி கொலை செய்துள்ளனர். அவரது கணவரின் உடம்பில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தி குத்துகள் ஆழமாக விழுந்துள்ளன. இப்படி ஒரு ஆக்ரோஷம் பழி வாங்குபவர்களுக்குதான் இருக்கும் என்கிறது போலீஸ்தரப்பு. வெறும், பணத்துக்காகவோ, நகைக்காகவோ வெறிபிடித்து கத்தியால் குத்த வாய்ப்பே இருக்காது என்ற சந்தேகமும் எழுகிறது.
வேலைக்கார பெண்
இதனிடையே இன்னொரு விவகாரம் கிளம்பி உள்ளது... இதற்கு முன்பு உமா மகேஸ்வரி வீட்டில் வேறு ஒரு பெண் வேலை பார்த்தாராம். அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதால் அந்த ஆத்திரத்தில் இந்த கொலை நடந்திருக்குமோ, அதனால்தான் இப்போதுள்ள வேலைக்கார பெண்ணையும் கொன்றிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
தீவிரம்
எல்லா தரப்பிலும் விசாரணையை போலீசார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் இன்னும் கொலையாளி யார் என்றே தெரியவில்லை.. ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை.. எப்படி இருந்தாலும் விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் போலீசார்!