மனக்கசப்புகளை மறந்து வைகோவுக்கு வாஞ்சையான வரவேற்பு...!
நெல்லை: நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு பிரச்சாரம் செய்யச் சென்ற வைகோவை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பழையகோபதாபங்களை மறந்து வாஞ்சையுடன் வரவேற்றார்.
கடந்த மக்களவை கூட்டத்தொடரில் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது வைகோ குற்றஞ்சாட்டியதால் கே.எஸ்.அழகிரி வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆகியிருக்க முடியாது என விமர்சித்தார். பதிலுக்கு திமுக தான் தன்னை எம்.பி.யாக்கியதே தவிர காங்கிரஸ் இல்லை என வைகோ தெரிவித்தார்.
மதிமுக-காங்கிரஸ் இடையே அறிக்கையுத்தம் நடைபெற்றது. இது திமுக கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்படும் அளவுக்கு சென்றது. இதையடுத்து அதில் தலையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரிடமும் பேசி அமைதிப்படுத்தி கூட்டணிக்குள் புகைச்சல் இல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்நிலையில் வைகோவுக்கும் உடல்நலமில்லாமல் போனதால் அவரும் கடந்த இரண்டு மாதகாலமாக ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இதனிடையே விக்ரவாண்டியில் 2 நாட்கள் முகாமிட்டு திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த அவர், இன்று காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வதற்காக நாங்குநேரி வந்திருக்கிறார். அவரை மனக்கசப்புகளை மறந்து கே.எஸ்.அழகிரியும், கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ.வும் வரவேற்று நடப்பு அரசியல் குறித்து பேசினர். மேலும், வைகோவின் உடல்நலம் பற்றியும் உருக்கமாக விசாரித்தார் அழகிரி.
பின்னர் கே.எஸ்.அழகிரியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடிக் கிடப்பதாகவும் , ஊழல் புதைச்சேற்றில் தமிழக அரசு சிக்கியுள்ளதாகவும் விமர்சித்தார். ஆட்சிமாற்றத்திற்கு முன்னோட்டமாக இப்போது நடக்கும் இடைத்தேர்தல் அமையும் என்றும், இதில் அதிமுக தோல்வியடைவது உறுதி எனவும் தெரிவித்தார்.