வசந்தகுமார் 4 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டு விடுவிப்பு...3 பிரிவுகளில் வழக்கு
நெல்லை: இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நாங்குநேரி போலீசாரால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
வசந்தகுமார் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளதோடு அவர்களை கொந்தளிக்கவும் செய்தது.
இதையடுத்து பிற்பகல் 3 மணி முதல் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நாங்குநேரி காவல்நிலையத்தில் குவிந்து அவரை விடுவிக்கக்கோரி முழக்கம் எழுப்பினர்.
சசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்!
விசாரணை
பாளையங்கோட்டையில் உள்ள வீட்டில் இருந்து நாகர்கோவில் உள்ள தனது அலுவலகத்திற்கு செல்வதற்காக காரில் புறப்பட்ட வசந்த்குமார் எம்.பி. நாங்குநேரி வழியாக சென்றிருக்கிறார். அப்போது கலங்கடி என்ற இடத்தில் வசந்தகுமார் காரை மறித்த போலீஸ் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நீங்க இங்கு சுற்றுவது ஏன் வினவியது.
மீண்டும் பாளை
தான் வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட வரவில்லை என்றும், கன்னியாகுமரிக்கு செல்வதற்காக இந்த வழியாக செல்கிறேன் என பதில் அளித்துள்ளார். மேலும், மீண்டும் தான் பாளையங்கோட்டைக்கு செல்வதாக கூறி காரை திருப்பியுள்ளார் வசந்தகுமார்.
ஏற்க மறுப்பு
வசந்தகுமார் காரை பின் தொடர்ந்த போலீசார் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அவரது காரை இடைமறித்து அண்ணாச்சி நீங்க ஸ்டேஷனுக்கு வாங்க விசாரிக்க வேண்டியுள்ளது எனக் கூறி அழைத்துச்சென்றனர். வசந்தகுமார் அளித்த பதிலை போலீஸ் ஏற்கவில்லை.
ஆவேசம்
பிற்பகல் 2 மணியளவில் நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற வசந்தகுமாரிடம் மீண்டும் தொகுதிக்குள் சுற்றியது தொடர்பாக விசாரித்திருக்கிறது. இதனால் ஆவேசமடைந்த வசந்தகுமார், தான் ஒரு எம்.பி.என்பதை நினைவில் வைத்து பேச வேண்டும் என்றும், தான் இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.என்பதை மறந்துவிடக்கூட்டாது என்றும் எகிறியுள்ளார்.
யோசனை
வசந்தகுமாரின் ஆவேச பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த நாங்குநேரி போலீஸ், அவர் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து நீண்ட நேரம் ஆலோசித்து, பின்னர் தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தது.
சட்டை செய்யாத வசந்தகுமார்
தேவையின்றி கூட்டம் கூடுதல், வாக்குப்பதிவு மையத்திற்கு தொடர்பில்லாத நபர் அத்துமீறி நுழைதல் உள்ள தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக நாங்குநேரி போலீஸ் 3 பிரிவுகளில் வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்தது. அதனை சட்டை செய்யாத வசந்தகுமார் எம்.பி. காவல்நிலையத்திற்கு முன் திரண்ட நிர்வாகிகளை அமைதியாக இருக்க அறிவுறுத்தினார்.
4 மணி நேரம் சிறைபிடிப்பு
பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 4 மணி நேரம் வசந்தகுமாரை சிறைபிடித்து விசாரணை நடத்திய நாங்குநேரி போலீஸ் இரு நபர் பிணையின் கீழ் அவரை விடுவித்தது. இதனிடையே நாங்குநேரி காவல்துறைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.