என்னை கடத்தி கொல்ல முயற்சி... உயிருக்கு ஆபத்து - வி வி மினரல்ஸ் வைகுண்டராஜன் கதறல்
திருநெல்வேலி: அடையாளம் தெரியாத நபர் தன்னை கடத்த முயன்றதாகவும் மர்ம நபர்களால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், வி.வி.மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன் நெல்லை மாநகர காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். தப்பிச்சென்ற நபரை பிடித்து கொடுத்தும் காவல் துறையினர் விடுவித்து விட்டதாகவும் கூறியுள்ளார் வைகுண்ட ராஜன்.
Recommended Video
பிரபல தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளர் வைகுண்டராஜன். இவர் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான வி.வி. மினரல்ஸ் நிறுவனருமாவார். நெல்லை மாவட்டம், திசையன்விளை என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது வி.வி.மினரல்ஸ் நிறுவனம்.
பல தொழில்கள் செய்து வரும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமான வரித்துறையிடம் சிக்கினார். முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
கொல்ல முயற்சி
கடந்த சில ஆண்டுகாலமாகவே ஊடக வெளிச்சத்தில் சிக்காமல் இருந்த வைகுண்டராஜன் இன்று நெல்லை மாநகர காவல்துறை அலுவலகத்திற்கு வந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்துள்ளார். மர்ம நபர்கள் தன்னை நோட்டம் விட்டு போட்டோ எடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
நோட்டம் விட்ட இருவர்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகுண்ட ராஜன், பாளையங்கோட்டையில், வழக்கறிஞர் மகாராஜன் வீட்டில் இருக்கும்போது , எனது சகோதரர் ஜெகதீசன் நிறுவனத்தில் பணியாற்றும் மாரிகண்ணனும் மற்றொருவரும் நோட்டமிட்டனர். அதில், மாரிகண்ணனை பிடித்து விசாரித்த போது, எனது சகோதரர் மகன் செந்தில்ராஜன் கூறி போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்தார். இதற்காக அவர்களுக்கு கார், இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டோ வீடியோ எடுத்த மர்ம நபர்
தப்பி சென்ற நபரின் பெயர் நாகராஜன் என்று கூறிய வைகுண்ட ராஜன், அவர் எடுத்த புகைப்படம், வீடியோக்களை முத்துகிருஷ்ணன், செந்தில்ராஜன் மற்றும் பலருக்கு அனுப்பி வருவதாக தெரிவித்தார். தன்னை கடத்த முயன்ற நபரை காவல் நிலையத்தில் பிடித்து கொடுத்தும் அவர்கள் விடுவித்து விட்டனர் என்று கூறியுள்ளார் வைகுண்ட ராஜன்.
வைகுண்ட ராஜன் பீதி
அண்ணாச்சி என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் வைகுண்டராஜனை பார்த்துதான் பலரும் பீதியடைவார்கள். இன்றைக்கு அந்த வைகுண்ட ராஜனே முகம் முழுக்க பீதியுடன் வந்து உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார்.