நாங்குநேரி தொகுதியா இது.. தொழிலாளர்களும் மகிழ்ச்சி.. சூப்பர் மாற்றம்
Recommended Video
நெல்லை: உயர் நீதிமன்றத்தின் தடை எதிரொலி காரணமாக, இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எங்குமே பேனர் விளம்பரங்களை, அரசியல் கட்சியினர் செய்யவில்லை என்பது கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் நாங்குநேரி தொகுதியில் களநிலவரம், வழக்கமான தேர்தல்களை விட வித்தியாசமாக காணப்படுகிறது என்பதை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது.
கிராமப்புற தொகுதி
72 ஊராட்சிகளும், 5 டவுன் பஞ்சாயத்துகளும், உள்ள அதிக கிராமப்புறங்களை உள்ளடக்கியதுதான் இந்த சட்டசபை தொகுதி. இந்த முறை பிளக்ஸ் பேனர், விளம்பரங்கள் ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. எனவே, கிராமங்கள்தோறும் சுவர் விளம்பரங்கள் தென்படுகின்றன. சுவர் விளம்பரங்களுக்கு ஏற்பட்டுள்ள செம டிமாண்ட் காரணமாக, பிற மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுவர் விளம்பர கலைஞர்கள் நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டு அரசியல் கட்சிகளுக்காக இந்த பணிகளை செய்து கொடுத்துவிடுகின்றனர்.
நூற்றுக்கும் மேல்
கடந்த முறை 20 பேரை வைத்துதான் சுவர் விளம்பரம் எழுதியதாகவும், இந்த முறை பிளக்ஸ் மற்றும் பேனர் தடை செய்யப்பட்டு உள்ளது என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கிறார் ஒரு ஒப்பந்ததாரர். இதனால் சுவர் விளம்பரங்கள் வரையக்கூடிய தொழிலாளிகள் சந்தோஷத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிக பணி
அதேநேரம் குறுகிய காலத்தில் அதிகப்படியாக சுவர் விளம்பரம் எழுத வேண்டியிருப்பதால், காலையில் விடிந்தும் விடியாமலும் தொழிலுக்கு வந்து விடும் தொழிலாளர்கள், சூரியன் மறையும் வரை கடுமையாக உழைத்து தங்கள் பங்களிப்பை செய்து கொண்டபடி இருக்கின்றனர். கடந்த முறை சுவர் விளம்பரம் செய்ய பெருமையான கெடுபிடிகள் இருந்ததாகவும், இப்போது அதை தளர்த்தியுள்ளதாகவும், தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
பணிகள் அதிகரிப்பு
இதுபற்றி தொழிலாளி ஒருவர் தெரிவிக்கையில், முன்பெல்லாம், சுவரில் வெள்ளையடித்து வைத்திருப்பார்கள். நாங்கள் கட்சியின் சின்னம் மற்றும் பெயர் கொண்ட விளம்பரங்களை வரைந்தால் போதுமானதாக இருந்தது. இப்போது வெள்ளையடிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நாங்கள் தான் செய்கிறோம். இந்த தொகுதி முழுக்க இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால், தீவிரமாக பணியாற்றி வருகிறோம் என்றார்.
கலர்ஃபுல் நாங்குநேரி
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், அதிக அளவு கட்டவுட்டு மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன. இந்த முறை சுவர் விளம்பரம் அதிகமாக இருப்பதால், நாங்குநேரி தொகுதி வண்ண மயமாக காட்சி அளிக்கிறது. சுவர்கள் புத்துயிர் பெற்று பளபளப்பாக இருக்கின்றன. இதனால் நாங்குநேரி தொகுதியில் தேர்தல் களை கட்டியுள்ளது.