அணை திறப்பு முதல், 'அந்த' போட்டோ வரை.. ராதாபுரம் தொகுதியில் அனல் பறக்கும் 'தண்ணீர் அரசியல்'
நெல்லை: மணிமுத்தாறு, அணையில் இருந்து ராதாபுரம், திசையன்விளை பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு யார் காரணம் என்ற 'தண்ணீர் அரசியல்' ராதாபுரம் தொகுதியில் கொடிகட்டி பறந்து வருகிறது.
மழை சரிவர பெய்யாத காரணத்தால், நெல்லை மாவட்டம், ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாலுக்காக்களை சேர்த்த சுவிஷேசபுரம். புதுக்குளம், தத்தன்குளம், செங்குளம், முதலாளி குளம், குருவி சுட்டான்குளம், அப்புவிளை குளம், புத்தன்தருவை குளம், எருமை குளம், இலங்குளம், கடகுளம் போன்ற குளங்கள் ஆண்டுதோறும் தண்ணீரின்றி வறண்டுக் கிடக்கின்றன.
இந்த வருடம் பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்த நிலையில், மணிமுத்தாறு 4வது ரீச்சிலிருந்து இந்த குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஒரு பக்கம் கடலில் தண்ணீர் கலக்கிறது, மறுபக்கம் இந்த குளங்களுக்கு தண்ணீர் வரவில்லையே என்ற கேள்வி மக்களிடம் இருந்தது.
ஆனால், அணை நீர் மட்ட அளவை வைத்துதான் 4வது ரீச் திறக்க முடியும் என்கிறார்கள் நீர்ப்பாசனத் துறையினர். இந்த நிலையில், பிப்ரவரி 3ம் தேதி முதல் மணிமுத்தாறு அணை 4வது ரீச்சிலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. எனவே, மேற்கண்ட குளங்களுக்கு நீர் வரத்து வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 28ம் தேதிவரை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
தண்டாயுதபாணி படத்தோடு.. பழனி பஞ்சாமிர்தம் வீடு தேடி வரும்.. ரூ.250 செலுத்தி பெறலாம்.. அரசு நடவடிக்கை
ஆனால், திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அப்பாவு முன்முயற்சி எடுத்ததால்தான், தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறி திமுகவினர் அவரை பாராட்டுகிறார்கள். ஹைகோர்ட் மதுரை கிளையில் அப்பாவு பொது நல வழக்கு போட்டதால்தான் அரசு நடவடிக்கை எடுத்ததாக திமுகவினர் தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம், செய்தியாளர்களிடம் பேசிய, ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை (அதிமுக), எல்லாம் கூடி வந்த நேரத்தில், அப்பாவு போலியாக நல்ல பெயரை தட்டிச் செல்ல முற்படுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார். இன்பதுரை மேலும் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்தபோதே, மணிமுத்தாறு அணை நீரை திறக்க கோரிக்கை விடுத்தேன். தொடர்ந்து தண்ணீர் திறக்க தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தேன். அதன் விளைவாக 3ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்டுதான், அப்பாவு, திடீரென வழக்கு போட்டுள்ளார். இதன் மூலம் நல்ல பெயரை நாம் தட்டிச் செல்லலாம் என நினைக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்ததாக, அப்பாவுவை விவசாயிகள் சந்தித்து வாழ்த்தியதாக ஒரு புகைப்படத்தை மீடியாவில் வெளியிட்டுள்ளார். ஆனால் அது, சில திமுக நிர்வாகிகள் ஜனவரி 3ம் தேதி அப்பாவுவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமாகும். இதை அதிமுக ஐடி விங் கண்டுபிடித்துள்ளது என்று அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள். ஜனவரி 3ம் தேதி, திமுகவினர் அப்பாவுவிடம் நின்று எடுத்த படத்தையும் அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தண்ணீர் திறப்புக்கு யார் காரணம் என்ற அரசியலால் ராதாபுரம் தொகுதியில் அனல் பறக்கிறது.