நாங்குநேரியை தூக்கி கொடுத்த காங்கிரஸ்.. எப்படி நடந்தது மாற்றம்.. அதிமுக வெற்றிக்கு 6 காரணங்கள்!
Recommended Video
நெல்லை: காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதி தற்போது, அதிமுகவின் கைகளுக்கு தூக்கி தரப்பட்டுள்ளது. 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி வாகை சூடியுள்ளார்.
இந்த தேர்தல் முடிவில் திடீரென ஆச்சரியப்பட ஏதும் கிடையாது, ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். தேர்தல் முடிவு இப்படித்தான் போகும் என்று, ஏற்கனவே நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பதும் நீங்கள் அறிந்தது.
காங்கிரஸ் கட்சி வசந்தகுமார், நாங்குநேரி எம்எல்ஏவாக பதவி வகித்து வந்த நிலையில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தற்போது எம்பியாகியுள்ளார்.
குமரி அனந்தன்
இதையடுத்து, நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த முறை காங்கிரசின் மிக மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலரும் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், தொழிலதிபரான ரூபி மனோகரன் என்பவருக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தது, காங்கிரஸ் கட்சித் தலைமை.
அனுபவம்
தள்ளாத வயதிலும் விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணலை, எதிர்கொண்ட குமரிஅனந்தன் போன்ற மூத்த தலைவர்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபர் என்பதற்காகவே ரூபி மனோகரன் போன்ற புதியவர்களுக்கு போட்டியிட காங்கிரஸ் தலைமை டிக்கெட் கொடுத்துவிட்டதாக தொகுதிக்குள் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டது. நேர்காணலுக்கு வந்து சென்ற குமரி அனந்தனின் முகம் அவர்கள் உள்ளங்களில் ஊசலாடியது.
அதிருப்தி
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் முதியவர்கள். குமரி ஆனந்தன், வசந்தகுமார் போன்றவர்களின் ஆதரவாளர்கள். இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் ரூபி மனோகரன், குமரி அனந்தனை விட எந்த அளவுக்கு கட்சிக்கு அரும்பணி ஆற்றி விட்டார் என்ற கேள்வி அவர்களை துளைத்து எடுத்தது.
திமுக விருப்பம்
மற்றொரு பக்கம், இந்த தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் இளம் தலைவரான உதயநிதி ஸ்டாலின் விரும்பியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மீண்டும் அங்கு காங்கிரஸ்தான், போட்டியிடும் என்று உறுதியாக இருந்துவிட்டார். எனவே, கூட்டணிக்காக மறுபடியும் காங்கிரஸுக்கு அந்த தொகுதியை விட்டுக் கொடுத்தது திமுக. இதனால், திமுகவின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர்தான் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்தனர். ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு பெருமளவுக்கு கூட்டம் சேர்ந்தாலும் கூட, அது வாக்குகளாக மாறாமல் போனதற்கு இந்த அதிருப்தியும் ஒரு முக்கிய காரணம்.
வேலூர் பார்முலா
காங்கிரசுக்குள்ளேயே பல பிரிவுகளாக மோதல் உருவானது, திமுக தொண்டர்கள் நடுவேயான அதிருப்தியும், காங்கிரஸ் வெற்றியை கேள்விக்குறியாக மாற்றி விட்டது. இது தவிர, வேலூர் லோக்சபா தொகுதியில் கையாண்ட அதே பார்முலாவை அதிமுக இங்கும் கையிலெடுத்தது. பாஜகவில் முன்னணி தலைவர்கள் யாரையும் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மட்டுமே தேர்தல் பணியாற்றினர். அவர் அந்த பகுதியில் தனிப்பட்ட அளவில் செல்வாக்கு வைத்து இருக்கக் கூடிய தலைவர் என்ற அளவுக்குத்தான் பயன்படுத்தப்பட்டாரே தவிர, பாஜகவின் முகமாக கிடையாது.
அடித்து ஆடிய அதிமுக
அதுமட்டுமின்றி 2 தொகுதி சட்டசபை இடைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றால் திமுகவுக்கு பெரும் பின்னடைவாக மாறும் என்பதால் அதிமுக தலைமை இந்த தேர்தலை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டது. தேனி ஃபார்முலாவை கையிலெடுத்து தீவிரமாக களப்பணி ஆற்றியது. இரு தொகுதிகளுமே, திமுக கூட்டணி வசம் இருக்கக்கூடிய தொகுதிகள். எனவே இழப்பதற்கு எதுவுமில்லை, அடித்து ஆடுவோம் என்ற நிலையில்தான் அதிமுக தலைமை இருந்தது. அப்படி அவர்கள் அடித்து ஆடியதற்கு, இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. இன்னுமொரு தகவல் இதில் ஒளிந் து இருக்கிறது. அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நெற்றியில் எப்போதுமே, உள்ள ஒற்றை வெள்ளை நாமம். கண்டிப்பாக வாக்காளர்களிடம் அது அணி திரட்டலையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும். எப்படி என்கிறீர்களா? நாங்குநேரியில் களநிலவரம் அப்படி!