போலீஸ் ஸ்டேசனில் வண்டிகளை திருடியது ஏன்? பெண் போலீஸ் கிரேசியா பரபர வாக்குமூலம்
நெல்லை: நெல்லை கூடங்குளம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளில் சிலவற்றை அங்கு பணியாற்றும் பெண் காவலர் கிரேஷியா திருடியதால் கைது செய்யப்பட்டார். கைதான அவரும் அவரது கணவர் அன்புமணியும் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் திருட்டில் ஈடுபட்டதாக கூறினார்கள்.
பொதுவாக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை, மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவற்றை குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றத்தில் அபராதம் கட்டி வாகனத்தை மீட்கலாம்.
அதுவரை பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேசன்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அப்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேசன்களிலும் ஏராளமான இருசக்கர வானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தல்.. ஓவைசி கட்சியை இழுத்து சாதித்த திமுக.. மு.க. ஸ்டாலின் ராஜதந்திரத்துக்கு வெற்றி!
திருடு போன பைக்குகள்
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் காணாமல் போனது. அதுவும் விலை உயர்ந்த வாகனங்கள், செல்போன்கள் திருடுபோவதுமாக இருந்தது. கடந்த மாதத்தில் குற்றச் சம்பவம் தொடர்பாக மதன்ராஜ் என்பவரது பைக் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஃபைன் கட்டிய பின்னரும் பைக்கை ஒப்படைக்காமல் இழுத்தடித்துள்ளனர். அதனால் நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணனிடம் புகார் செய்தார். இதையடுத்தே திருட்டு விவகாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து வாகன திருட்டில் ஈடுபடுவர்களை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார்.
திருடியது போலீஸ்
இந்நிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணிபுரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசியா (29), . என்பவர் தான் நைட் டூட்டியில் இருக்கும் போது கணவரை அழைத்து வந்து திருடுவது தெரியவந்தது.
எப்படி நடந்தது
பல்வேறு வழக்கில் சம்பந்தமாக கைப்பற்றப்பட்ட நிலையத்தில் இருக்கும் இருசக்கர வாகனத்தை இரவு பாரா டூட்டியில் இருக்கும் நேரங்களில் தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரவழைத்து அவரின் உதவியோடு மூன்று இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
கணவரும் கைது
மேலும் காவல் நிலையத்தில் இருக்கும் ஒரு மொபைல் போனையும் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஒன்றையும் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான காவலர் கிரேசியாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் உத்தரவிட்டார்.
அன்புமணி
கிரேசியா மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி போலீசார் கூறுகையில் கிரேசியா மற்றும் அவரது கணவர் அன்புமணி ஆகிய இருவரும் இதுவரை 10-க்கும் அதிகமான பைக்குகளைத் திருடி விற்பனை செய்துள்ளார்கள் அவர்களிடம் இருந்து, காவல் நிலையத்தில் திருடிச் செல்லப்பட்ட 3 பைக்குகள், ஒரு செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
காதல் திருமணம்
கைதான காவலர் கிரேசியா, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 2011-ம் ஆண்டு காவலராகத் தேர்வாகி சென்னையில் பயிற்சி பெற்றார். அங்கு ஆயுதப்படையில் பணியாற்றியபோது அருகே இருந்த ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்த நெல்லை மாவட்டம் சீதபற்பநால்லூரை சேர்ந்த அன்புமணியை காதலித்துள்ளார்.
கூடங்குளம் மாறுதல்
பின்னர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் 2012-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் இருந்து 2018-ம் ஆண்டு நெல்லை ஆயுதப் படைக்கு பெண் போலீஸ் கிரேசியா மாற்றலாகி இருக்கிறார். 2019-ம் ஆண்டு கூடங்குளம் காவல் நிலையத்துக்கு கிரேசியா மாற்றப்பட்டார். அங்கு அவர் தனியாக வீடு எடுத்துத் தங்கி உள்ளார். அவரது கணவர் கடையம் பகுதியில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
ஏன் திருடினார்கள்
வாரத்தில் மூன்று நாள் இரவு பாரா டூட்டியில் இருக்கும் கிரேசியா, காவல் நிலையத்தில் பைக்குகள் பிடிபட்டு நிறுத்தப்பட்டிருந்தால், கணவரை வரவழைத்துத் திருடி விற்பனை செய்திருக்கிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்கள் இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.