குற்றால குளியல் ஆனந்தம் மட்டுமல்ல ஆபத்தும் இருக்கு - பெண்களே உஷார்
குற்றாலம்: குற்றாலத்தில் கொட்டும் அருவிகளில் குளித்து மனதும் உடலும் இளைப்பார வரும் பெண்களை ஆபாச வீடியோ எடுக்கும் கும்பல் மிரட்டுகிறது. பெண்கள் உடைமாற்றும் அறைகளில் ஓட்டை போட்டு அந்த இடத்தில் செல்போனில் கேமரா மூலம் படம்பிடித்து அதை இணையத்தில் பதிவேற்றி காசு பார்க்கின்றனர். அந்த கும்பலை பிடித்தால் சல்லி சல்லியாக பிரித்து மேயவேண்டும் என்று பெண்கள் குமுறலுடன் கூறி வருகின்றனர். குற்றாலம் போய் அருவியில் குளிக்கும் பெண்களே உடைமாற்றும் போது இனி ஜாக்கிரதையாக இருங்கள்.
குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். இதமான சாரல்... குளு குளு காற்றை அனுபவிக்க ஏராளமானோர் குற்றாலத்திற்கு படையெடுத்து வருவார்கள். இந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி முதல் குற்றால சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
குளிக்க காத்திருக்கும் மக்கள்
வெயிலடித்தாலும் இதமான சாரல் மழை பெய்வதால் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. தண்ணீர் குறைவாக விழுந்தாலும் மூலிகை தண்ணீரில் தலையை நனைத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் வரிசையில் காத்திருந்து குளித்து விட்டு செல்கின்றனர்.
ஓட்டை போட்ட சைத்தான்
குளித்து முடித்து உடைமாற்றும் போதுதான் ஆபத்து காத்திருக்கிறது. மெயின் அருவி பகுதிகளில் பெண்கள் உடைமாற்றும் அறையின் பின்புற சுவற்றினை உடைத்து அதில் துணியை கட்டி வைத்துள்ளனர். அந்த துணியில் ஓட்டையும் போட்டு வைத்துள்ளனர் சில சைத்தான்கள்.
வக்ர மனம் கொண்டவர்கள்
பெண்கள் உடைமாற்றும் போது மொபைல்போன் மூலம் அதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து அதை ரசிப்பதோடு இணையத்தில் போட்டு காசு பார்க்கின்றனர் வக்ரமனம் படைத்தவர்கள். கடந்த ஆண்டு சீசன் காலத்தில் இதுபோல உடைக்கப்பட்டிருந்த சுவரை கொத்தனாரைக் கொண்டு பூசினர். வீடியோ எடுத்த போது பிடிபட்ட நபரை அடி வெளுத்தனர். இப்போது மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு குழுவே இயங்கும் போல.
அடித்து கொல்ல வேண்டும்
பெண்கள் உடைமாற்றுவரை வீடியோ எடுத்த ஒரு மனிதமிருகத்தை இன்று பிடித்த போது தப்பிவிட்டது. அடுத்தமுறை பிடிபடும் நாய்களை ஜட்டியோடு காவல்நிலையத்திற்கு இழுத்துச்செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
பாதுகாப்பு தேவை
அருவியில் குளிக்கும் போல பலர் வீடியோ எடுக்கின்றனர். உடை மாற்றும் அறைகளிலும் ஆபத்து காத்திருக்கிறது. குற்றாலத்திற்கும் வரும் பெண்கள் கவனமாகவும் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தும் விழிப்புணர்வுடனும் குளிப்பதோடு உடைகளை மாற்றுங்கள்!
.
மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து சுற்றுலா பயணிகளை காக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.