காமன்வெல்த் யோகா போட்டி: அரசு உதவிக்கு ஏங்கும் நெல்லை மாவட்ட பள்ளி மாணவி மிஸ்பா
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் நெல்லை மாவட்ட மாணவி மிஸ்பா. ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் வசிப்பதால் அரசின் உதவிக்காக காத்திருக்கிறார்.
திருநெல்வேலி: தாய்லாந்தில் நடைபெற்ற யோகா போட்டியில் தங்கம் வென்று, காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவி மிஸ்பா நூருல் ஹபிபாவுக்கு அப்போட்டியில் பங்கேற்கச் செல்ல பணமில்லை. காமன்வெல்த் போட்டியில் சர்வதேச சாதனையை நிகழ்த்த வேண்டும் என துடிக்கும் மாணவிக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முகம்மது நசிருதீன் - ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் மூத்த மகள்தான் மிஸ்பா நூருல் ஹபிபா.
பிறந்தது முதலே சுட்டிக்குழந்தையாக வளர்ந்த மிஸ்பாவிற்கு குற்றாலம் செய்யது ஹில் வியூ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்தபோது யோகாவில் ஆர்வம் ஏற்பட்டது.
யோகாவில் சாதனை
அதுமுதல் யோகாசனங்களை கற்கத் தொடங்கியவருக்கு, குற்றாலம் குடியிருப்பை சேர்ந்த கே.எஸ்.குருகண்ணன்தான் குருநாதர்.
பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து மிஸ்பா அசத்தினார். மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பரிசுகளை குவித்தார்.
சமூக விழிப்புணர்வு
டெங்கு விழிப்புணர்வு, வனவிலங்கு, இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு, ஒருமைப்பாடு, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி அவ்வப்போது யோகாசனங்களை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
சாதனை மாணவி
மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பரிசுகளை குவித்த இவர், நாட்டு நலப்பணித் திட்ட சாதனையாளர் விருது, அரசு நேரு யுவகேந்திரா விருது, சிவகுரு இளைஞர் விளையாட்டு மன்ற சாதனையாளர் விருது, யோகா நட்சத்திர விருது, யோகா பாரதி விருது என்று பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் யோகா சிறப்பு நிலை பிரிவில் மாவட்ட மாநிலத்தில் தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு
ஆசிய அளவிலான அமெச் சூர் ஆசியன் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் தாய்லாந்தில் கடந்த மே மாதம் 26, 27 ஆம்தேதிகளில் நடைபெற்ற யோகா போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்றிருக்கிறார். இதன் மூலம் விரைவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார். மாணவி மிஸ்பா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சூழ்நிலையால் காமன்வெல்த் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மாணவிக்கு உதவி கிடைக்குமா?
ஏற்கெனவே தாய்லாந்து போட்டிக்கும் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் மகளை அனுப்பி வைத்ததன் மூலம் தந்தை நசிருதீனுக்கு ரூ.1 லட்சம் வரை கடன். உள்ளூர் ஜமாத்தார்கள் ரூ.60 ஆயிரம் வரையில் திரட்டி கொடுத்த ஆறுதல் உதவியால்தான் மிஸ்பாவின் தாய்லாந்து பயணம் சாத்தியமானது. இப்படி இருக்க மீண்டும் கடன் பெற்று மகளை காமன்வெல்த் போட்டிக்கு அனுப்பும் நிலையில் நசிருதீன் இல்லை. தங்களின் மகள் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க அரசு உதவி செய்ய வேண்டும் என மிஸ்பா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணச்செலவை ஏற்குமா
மாணவியின் குடும்ப சூழ்நிலை காரணமாக, குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், இவருக்கு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கட்டணமின்றி கல்வி கற்றுத்தர முன்வந்துள்ளது. மிஸ்பாவின் வெளிநாட்டு பயண செலவை அரசு ஏற்று ஊக்கப்படுத்த வேண்டும் என யோகா ஆசிரியர் குருகண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். ஏழை மாணவியின் பதக்கக் கனவை அரசு நிறைவேற்றுமா?
செய்தி படங்கள் உதவி- தென்காசி மா.மாரிமுத்து