திருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது!.. கொலைக்கான பகீர் பின்னணி..
திருத்தணி: திருத்தணியில் ஹோட்டல் ஒன்றில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு இளைஞர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை துரத்தினர்.
அந்த இளைஞர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்த ஹோட்டல் ஒன்றுக்குள் சென்றார். அவரை அங்கும் விடாமல் துரத்திய கும்பல் அவரை ஓட்டலுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டிக் கொன்றது.
இதையடுத்து அந்த 5 பேரும் தப்பியோடிவிட்டனர். இது தொடர்பான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்தவர் வேலூர் மாவட்ட்ம, அரக்கோணம் அருகே உள்ள நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் என்றும் 22 வயதானவர் என்றும் தெரியவந்தது.
ஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தனித்தனி குழுக்கள்
விசாரணையில் மகேஷ், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு கிராமத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது. பெருமாள்பட்டு கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் வாலிபால் போட்டியில் ஏற்பட்ட பிரச்சினையில் இன்பராஜ், விமல் ஆகிய இருவர் தலைமையில் தனித்தனி குழுக்களாக பிரிந்து செயல்படத் தொடங்கின.
விமல் தரப்பு
இதில் இன்பராஜ் குழுவை சேர்ந்தவர் மகேஷ். இந்த இரு குழுக்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. விமல் தரப்பை சேர்ந்த லல்லு என்பவரை இன்பராஜ் தரப்பினர் முதலில் கொலை செய்தனர். இதற்கு பழிக்கு பழி வாங்க 6 ஆண்டுள் கழித்து கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி இன்பராஜின் நண்பரான விக்னேஷ் என்ற இளைஞரை விமல் தரப்பு படுகொலை செய்தது.
நாகவேடு கிராமம்
இந்த படுகொலையை நேரில் பார்த்தவரான மகேஷ் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த படுகொலை சம்பவங்களால் பீதியடைந்த மகேஷ் குடும்பத்தினர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெருமாள்பட்டை விட்டு காலி செய்து விட்டு நாகவேடு கிராமத்துக்கு சென்றுவிட்டனர்.
பிழைத்துக் கொண்ட தினேஷ்
இந்த நிலையில் விக்னேஷ் கொலைக்கு பழிவாங்க வேப்பம்பட்டில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வேப்பம்பட்டில் ஒரு சலூன் கடையில் இருந்த தினேஷ் என்ற இளைஞரை இன்பராஜ் தரப்பினர் கொடூரமாக வெட்டினர், இதில் அவர் பிழைத்துக் கொண்டார்.
படுகொலை
நாகவேடு கிராமத்தில் இருந்து திருத்தணி வந்த மகேஷ் தனது நண்பர்களை பார்த்துவிட்டு சென்ற போதுதான் படுகொலை செய்யப்பட்டார். பெருமாள் பட்டு பகுதியை சேர்ந்த விமல்ராஜ், அஜித்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 4 பேரையும் போலீஸார் பிடிக்க முயற்சித்த போது தப்பி ஓடியதாகவும் அப்போது தவறி விழுந்ததில் கை, கால்கள் முறிந்துவிட்டதாகவு கூறப்படுகிறது. மேலும் கார் டிரைவர் சதீஷும் கைது செய்யப்பட்டுள்ளனர்.