மொத்தம் 7 பேர்.. ஃபுல் போதை.. ஏசி பாரில் ரகளை.. கேஷியர் தலையில் பீர் பாட்டிலால் அடி!
பார் கேஷியரை தாக்கிய 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
Recommended Video
திருவள்ளூர்: மொத்தம் 7 பேர்.. ஃபுல் போதை.. ஏ.சி. பாரில் ரகளை செய்துவிட்டு, கேஷியரை பீர் பாட்டிலால் அடித்து நொறுக்கியும் விட்டு, தப்பி இருக்கிறார்கள். இவர்கள் 7 பேரையும் சிசிடிவி காட்சியின் பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கலெக்டர் ஆபீஸ் பக்கத்தில் ஒரு பார் இயங்கி வருகிறது. அரசு அனுமதி பெற்ற ஏசி பார் இது. இந்த பாரில் அரக்கோணத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல பாலாஜி, மற்றும் பணியாளர்கள் பாரில் பணியில் இருந்தனர். அப்போது அந்த பாருக்கு ஒரு காரில் 7 பேர் தண்ணி அடிக்க வந்தனர்.
குடிபோதையில் இருந்த அவர்கள், "இந்த பாரில் ஏன் பாட்டில் எல்லாம் இவ்ளோ விலைக்கு விற்கறீங்க?" என்று அங்கிருந்த பணியாளர்களை மிரட்டி தகராறு செய்துள்ளனர். அப்போது அதை தடுக்க வந்த கேஷியர் பாலாஜியையும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், திடீரென அங்கு இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் ஒரே போடாக போட்டார்கள். இதில் மண்டை, கையில் பீர் பாட்டில் கிழித்து ரத்தம் ஊற்றியது.
இதன் பின்னரும் அவர்கள், அந்த பாரில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு, வந்த காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த பாலாஜியை உடன் பணிபுரிந்த பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலாஜியின் கையில் 6 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நடந்த சம்பவம் குறித்து அவர் திருவள்ளூர் நகர போலீசில் புகார் செய்யவும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாரில் தகராறு செய்து அடித்து நொறுக்கி கேஷியரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 7 பேர் யார் என்று அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவானதை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.