பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் அலைக்கழிப்பு.. இருப்பிட சான்று கேட்டவர் மரத்தடியில் பலி
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே மகனை உயர் கல்வியில் சேர்ப்பதற்காக இருப்பிடச் சான்று பெற சென்றவர், தாசில்தார் அலுவலகத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பஜார் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கிருஷ்ணன்(48). அவரது மகன் நந்தகுமார். உயர் கல்வியில் சேர இருப்பிடச் சான்று தேவைப்பட்டதால், 15 நாட்களுக்கு முன்பு பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் இருப்பிடச் சான்று கேட்டு மனு வழங்கினார்.
இருப்பினும் மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் தினமும் காலை முதல் மாலை வரை தாசில்தார் அலுவலகத்தில் காத்திருந்து வீடு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தாசில்தார் அலுவலகம் சென்றார்.
மரத்தடி
ஜமாபந்தி முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அதிகாரிகளை சந்திக்க முடியாமல் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் சோர்வாக அமர்ந்திருந்தார். மதியம் இரண்டு மணி அளவில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மயக்கமடைந்து மரத்தடியிலேயே சுருண்டு விழுந்தார்.
இறந்தவர் விவரம்
அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தாசில்தார் அலுவலக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் இறந்தவர் விவரங்கள் சேகரித்து போலீசாருக்கு தெரிவித்தனர்.
விசாரணை
பள்ளிப்பட்டு போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொதுமருத்துவனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயக்கம்
வருவாய்த் துறை அதிகாரிகள் இருப்பிடச் சான்று வழங்குவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததால்தான், கடும் வெயில் சாப்பாடின்றி மயக்கமடைந்து இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.