பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு!
சோழவரம்: பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது பெண் ஒருவர் விபத்தில் சிக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் பைக்குக்கு தீ வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காந்திநகரில் போலீசார் இன்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது பிரியா என்ற பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.
பின்னால் வந்த லாரி கீழே விழுந்த பிரியாவின் கால் மீது ஏறியதால் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து பொதுமக்கள் போலீசாரின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.