திருவள்ளூர் கனிமவளத் துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனையால் பரபரப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனிமவளத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்றும் தொடர்ந்து வருகிறது.
கனிமவளத் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கொள்ளைக்கு துணை போகிறார்கள் என்றும் ஏரிகளில் கிடைக்கும் சவுடு மணலை எடுக்க அனுமதி அளிக்கவும் லஞ்சம் பெறுவதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.
திடீரென வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கனிமவளத் துறை அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கதவுகளை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டனர்.
பின்னர் 12 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். கனிமவளத் துறை உதவி இயக்குநர் சீனிவாசன் உள்பட ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்த நிலையில் சீனிவாசனிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சீனிவாசன் சரியாக பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து மணல் குவாரி குறித்து சீனிவாசன் பேசிய ஆடியோக்கள், வங்கி பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். இன்றைய தினமும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.