திருவள்ளூர் எஸ்பி அரவிந்தனின் சட்டையை பிடித்த பாஜக தலைவர்.. அதிகாலையில் அதிரடியாக கைது
திருவள்ளூர்: திருத்தணியில் பாஜக நடத்திய வேல் யாத்திரையின் போது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சட்டையை பிடித்து தள்ளியதாக காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணை தலைவர் ஒம் சக்தி செல்வமணி இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்த நிலையில் அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை இதையடுத்து தடையை மீறி யாத்திரை செல்வோம் என அறிவித்த பாஜகவினர், திட்டமிட்டபடி திருத்தணியில் கடந்த 6ம் தேதி யாத்திரை நடத்தினர்,.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தடையை மீறி பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் பாஜகவினர் யாத்திரை நடத்தினர். இதையடுத்து 500க்கும் மேற்பட்ட பாஜக-வினரை திருவள்ளூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். அவர்களை அனைவரையும் திருத்தணியில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.
சட்டையை பிடித்து தள்ளினர்
அப்போது அங்கு மின்சாரம் இன்றி இருந்ததால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து அங்கு வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் சட்டையை பிடித்து தள்ளினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் முடிந்தது
அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜகவினரை சமரசம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனார். இதையடுத்து பாஜகவினர் மீண்டும் கல்யாண மண்டபத்திற்குள் சென்றார்கள்.
திருத்தணி போலீஸ்
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சட்டையை பிடித்து தள்ளியதாக காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணை தலைவர் ஒம் சக்தி செல்வமணியை இன்று அதிகாலை திருத்தணி போலீசார் தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
ஜாமினில் விடுவிப்பு
செல்வமணியை அழைத்துச் சென்ற போலீசார், அவர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் மீது கூட்டத்தில் சட்டையை பிடித்தது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. பின்னர் உள்நோக்கத்துடன் செய்யவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவர் செல்வமணி கூறியதால் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.