தடையை மீறி வேல் யாத்திரை... திருத்தணியில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கைது!
திருத்தணி: தமிழக அரசின் தடையை மீறி வேல்யாத்திரை செல்ல முயன்ற தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பாஜகவினர் திருத்தணியில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முருகனுக்கு உகந்த சஷ்டி: வேல் யாத்திரை இன்று தொடங்கி டிசம்பர் 6 வரை நடத்த திட்டமிட்டது ஏன்
யாத்திரை நடக்கும்
இதனையடுத்து தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படும் என தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி அறிவித்திருந்தார். தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கப்படும் இடமான திருத்தணியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருத்தணிக்கு முருகன் பயணம்
இதனிடையே சென்னையில் இருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முருகன், முருகனை வழிபட நான் விரும்புகிறேன். முருகனை வழிபடுவதற்கு எனக்கு அரசியல் சாசனப்படி உரிமை உள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழிபாட்டு உரிமை உள்ளது. அதனால் நான் திருத்தணி புறப்பட்டுச் செல்கிறேன் என்றார்.
சென்னை எல்லையில் அனுமதி
இந்த நிலையில் சென்னை எல்லையான நசரத்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் திருத்தணி செல்லும் எல். முருகனை எல்லையில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்யக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் நசரத்பேட்டையில் முருகன் தடுத்து நிறுத்தப்பட்டு 5 வாகனங்களுடன் மட்டும் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர்.
திருத்தணியில் முருகன்
இதையடுத்து பிற்பகலில் திருத்தணி முருகன் கோவிலை கையில் வேலுடன் சென்றடைந்தார் எல். முருகன். அங்கு பாஜகவினர், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா போன்ற சரண கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். பின்னர் வேலுடன் சென்று திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார் முருகன்.
யாத்திரை முயற்சி- கைது
திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர், தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றார் எல். முருகன். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி முருகன் உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதேபோல் பல மாவட்டங்களில் வேல் யாத்திரை நடத்த முயன்றதாக பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.