அதிமுக நிர்வாகிகளிடையே மோதல்... திகைத்து நின்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்..!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்பாக அதிமுக நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் கண் எதிரே நடைபெற்ற மோதலை கண்டு திகைத்துப் போன அமைச்சர் பாண்டியராஜன், அங்கிருந்தவர்களை சமாதானம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலரின் பெயர்கள் வாசிக்கப்படாமல் விடுபட்ட விவகாரத்தில் இந்த மோதல் நடைபெற்றிருக்கிறது.
மீண்டும் உயரும் கொரோனா கிராப்.. தமிழகத்தில் இன்று 5967 பேர் பாதிப்பு.. இதுவரை 3,85,352 பேர் பாதிப்பு
திருவள்ளூர் அதிமுக
திருவள்ளூர் மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை கட்சிக்குள் பல்வேறு கோஷ்டிகள் உள்ளன. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் ஆதரவாளர்கள், அமைச்சர் பெஞ்சமின் ஆதரவாளர்கள் என நிர்வாகிகள் பிரிந்து இருக்கின்றனர். இதனால் அவ்வப்போது கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளின் போது சலசலப்புகள் ஏற்படுவதும் பின்னர் சமாதானமாவதும் வழக்கமான ஒன்று.
திறப்பு விழா நிகழ்ச்சி
இந்நிலையில் திருவேற்காடு வடநூம்பல் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பதற்காக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அமர்ந்தார்.
அமைச்சர் திகைப்பு
அப்போது திடீரென அதிமுக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றது. அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விவகாரம் அதிமுக தலைமை வரை சென்றிருக்கிறது. கோபத்தில் இருந்தவர்களை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் கேட்டதாக தெரியவில்லை. இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டார் அவர்.
பெயர் விடுபடல்
அமைச்சர் சென்ற பிறகு நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் அதிகரித்தது. மூத்த நிர்வாகிகள் சிலர் தலையிட்டு மோதலில் ஈடுபட்டவர்களை அந்த இடத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். பெயர் விடுப்பட்ட விவகாரம் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.