திருப்பதியிலிருந்து திரும்பிய போது சோகம்.. விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
திருவள்ளூர்: திருப்பதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காப்பீட்டு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த சாய் சந்திரசேகர், சென்னை தரமணியிலுள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சாய் சந்திரசேகரின் மனைவி புஷ்கலா மற்றும் இவர்களது மகன் தருண் கிருஷ்ணா ஆகியோர் இந்த கோர விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் சாய் சந்திரசேகர். இவர் தனது மனைவி புஷ்கலா இந்த தம்பதியினருக்கு கைலாஷ், சாய் தருண் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகனான கைலாஷ் பம்மல் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். மற்றொரு மகனான மூன்று வயதான தருண் கிருஷ்ணா எல்கேஜி படித்து வந்தான். தனது குடும்பத்தினருடன் சாய் சந்திரசேகர் தங்களுக்கு சொந்தமான காரில் திருப்பதி கோயிலுக்கு சென்றார். நேற்று காலை குடும்பத்துடன் புறப்பட்ட சாய் சந்திரசேகரே காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
திருப்பதிக்கு சென்ற பின்னர் அங்கு ஒரு அறை எடுத்து தங்கிவிட்டு, நேற்று மாலை சிறப்பு சாமி தரிசனம் செய்துள்ளனர் சாய்சந்திரசேகர் குடும்பத்தினர். பின்னர் திருப்பதியில் வாடகைக்கு தங்கியிருந்த அறையை காலி செய்துவிட்டு, மீண்டும் பம்மலுக்கு தங்களது காரிலேயே புறப்பட்டனர்.
நள்ளிரவு 12.15 மணியளவில் திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் அருகே சாய்சந்திரசேகர் ஓட்டிய கார் வந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையில் அதிவேகத்தில் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சந்திரசேகர் ஓட்டி வந்த காரின் மீது மோதியது.
இதில் சாய் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் புஷ்கலா, கைலாஷ், தருண் கிருஷ்ணா ஆகிய மூவர் உடல்களையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இருக்கையில் படுத்திருந்த சாய் சந்திரசேகரின் மற்றொரு மகனான கைலாஷ் லேசான காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இருப்பினும், அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவில்லை.
விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி தரிசனத்திற்கு சென்று விட்டு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளது பம்மல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.