பேஸ்புக் காதல்.. நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாயை கொன்ற மகள் கைது.. திருவள்ளூரில் பரபரப்பு
Recommended Video
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஃபேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்த மகளை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8-ஆவது தெருவை சேர்ந்தவர் திருமுருகநாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி.
இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என்ற இரு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் இவரது வீட்டுக்குள் புகுந்த 2 பேர் கத்தியால் பானுமதியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
குடித்த தாய்ப்பாலை மறந்து.. கொடூரமாக கொன்ற மகள்.. கள்ளிப்பாலுக்குத் தகுதியானவர் என மக்கள் ஆவேசம்!
பலியான பானு
இதையடுத்து பானுவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பானுமதியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவர் பலியானார்.
காவல் நிலையத்தில்..
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸார் தேவிப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பதிலில் போலீஸாருக்கு லைட்டாக சந்தேகம் வந்தது. இதனிடையே பானுமதியை கத்தியால் குத்திய இளைஞர்களை அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பேஸ்புக்கில் பழக்கம்
விசாரணையில் தேவிப்பிரியாவுக்கு கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
தடுத்து நிறுத்தம்
விவேக் மைசூரில் வேலை செய்து வருகிறாராம். தேவிப்பிரியாவை அழைத்து வருவதற்காக விவேக் தனது நண்பர்களான விக்னேஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை அனுப்பியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தேவிப்பிரியா கிளம்புவதை பானுமதி பார்த்துவிட்டு அவரை தடுத்துள்ளார்.
அதிர்ச்சி
அந்த நேரத்தில் அங்கு வந்த இரு இளைஞர்களும் பானுமதியை குத்திவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தேவிப்பிரியா, விக்னேஷ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். ஃபேஸ்புக் காதலுக்காக பெற்றெடுத்த தாயையே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.