தகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்!
தயாராகி வரும் கருணாநிதியின் சிலையை முக ஸ்டாலின் பார்வையிட்டார்
திருவள்ளூர்: கருப்பு கலர் கூலிங் கிளாசுடன் தகதகவென மின்னுகிறது கருணாநிதி சிலை.. இதை அப்படியே தன்னுடைய செல்போனில் வளைத்து வளைத்து போட்டோ பிடித்து கொண்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின்!
வருகிற ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதியின் நினைவு நாள் வர போகிறது. அதற்காக முரசொலி ஆபீசில் வைக்க அவரது சிலை செய்ய முடிவானது.
அதன்படி, மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் கருணாநிதியின் சிலை செய்யும் பணி நடந்து வருகிறது. சிற்பி தீனதயாளன் பட்டறையில்தான் இந்த சிலை செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. 5.25 அடி உயரத்தில் சிலை தயார் ஆனது.
முதலில் களிமண்ணால் சிலையின் மாதிரி செய்யப்பட்டது. போன மாசம் இதனை ஸ்டாலின் சென்று பார்வையிட்டு வந்தார்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று மீண்டும் பார்வையிட ஸ்டாலின் சென்றார். அவருடன் முரசொலி செல்வம், ஆ.ராசாவும் சென்றிருந்தனர். களிமண்ணால் உருவாகி இருந்த சிலை இப்போது, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் அச்சில் மின்னியது.
கருணாநிதி கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு, கையில் எழுதுகோலை பிடித்து எழுதுவது போல சிலை உள்ளது. கருப்பு கலர் கூலிங் கிளாஸ் அணிந்து, கலைஞர் நம்மை பார்த்து சிரிப்பது, அப்படியே தத்ரூபமாக இருக்கிறது. சிலையை பார்த்ததும் ஸ்டாலின் செல்போனில் போட்டோ எடுத்து கொண்டார்.
பிறகு சிற்பி தீனதயாளிடம் சின்ன சின்ன திருத்தங்களை சொல்லி, அவைகளை மாற்ற சொன்னார். சீக்கிரமாக சிலையை செய்து முடிக்கும்படியும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.