கமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை.. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். கடந்தாண்டு நடந்த கிராம சபை கூட்டத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.
சாலையை சீரமைத்தல், தெரு விளக்கு பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் அதே போல், பகுதி நேர ரேஷன் கடைக்கு நிரந்தர கடை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தநிலையில், தண்ணீர் சேமிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை என்றும், ஒரு குடம் தண்ணீர் ரூ.10 க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் கிடைப்பதில் கூட சிரமம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கனிமொழி பேச்சை கேட்கணும்.. ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே வீடியோவில் பார்த்த வசந்தி ஸ்டான்லி
தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தை கலைந்து போக செய்தனர். கமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமம் முன்மாதிரியாக திகழும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருவதாக, அப்பகுதி மக்கள் முணுமுணுத்து கொண்டனர்.