மாஃபா பாண்டியராஜன் பங்கேற்ற பிரியாணி விருந்து... கேள்விக்குறியான சமூக இடைவெளி..!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முககவசம் அணிந்து பொதுவிடங்களுக்கு செல்ல வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை சுகாதாரத்துறை தொடர்ந்து முன் வைத்து வருகிறது.
பொதுமக்களில் பெரும்பாலானோர் இவற்றை கடைபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மட்டும் இதற்கு விதிவிலக்காகவே இருந்து வருகின்றனர். சமூக இடைவெளி என்பதை கேலிக்கூத்தாக்கும் வகையிலேயே அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றினாலே கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என பேசியிருந்தார். அவ்வாறு அவர் அங்கு பேசிய நிகழ்ச்சியலேயே விருந்துக்காக ஏற்பட்ட கூட்ட நெரிசல் சமூக இடைவெளியை கேள்விக்குள்ளாக்கியது.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம்... முதலீடுகள் ஈர்த்தது பற்றி வெள்ளை அறிக்கை தேவை -மு.க.ஸ்டாலின்
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள நிலையில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும் தான் அரசியல்வாதிகளின் அடையாளமோ..!